தமிழர் திருநாள்

அண்ணாதுரை, காஞ்சி, 12–1–1969

SG
14 min readJan 13, 2022

★ சூழ்நிலைக் கைதி — முதலமைச்சர்!

★ இரண்டாண்டுகளாகக் “கிழமைக் கடிதம்’ இழந்து தவிக்கிறேன்!

★ நலந்தானா?

★ மனிதத் தன்மையை நம்புகிறேன்!

★ பொங்கல் திருநாளுக்கு ஒப்பான விழா உலகமெங்கிலும் இல்லை!

★ “தமிழ் நாடு’ பெயர் சட்டத்தில் ஏறிவிட்டது!

★ மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவை!

★ வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறைகள்!

★ மூன்று பல்கலைக் கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சிக்கு இடம்!

★ பொங்கல் திருநாள் இருக்கும் இடத்திற்காக! மற்றவை போகும் இடத்திற்காக!

★ தமிழ்ப் பண்பாட்டினை எடுத்துக் கூறுவது பிளவு மனப்பான்மையாம்!

★ வெள்ளம் அழித்திடும்! வாய்க்கால் வளமூட்டும்!

★ உழைப்பே செல்வம்! உழைப்பே உயர்வு!

★ காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்றுக!

தம்பி!

எந்தப் பணி எனக்கு இனிப்பும் எழுச்சியும் தந்து வந்ததோ,

எந்தப் பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்திருந்தேனோ,

எந்தப் பணி மூலம் என்னை உன் அண்ணனாக நீ உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு, பெருமிதத்துடன், உலகுக்கு அறிவித்து வந்தனையோ,

எந்தப் பணி வாயிலாக என் கருத்துக்களை உனக்கு அளித்து உன் ஒப்புதலைப் பெற்று அந்தக் கருத்துக்களின் வெற்றிக்கான வழியினைக் காண முடிந்ததோ,

எந்தப் பணியின் மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழி கிடைத்து வந்ததோ,

எந்தப் பணி மூலம், எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து நான் அளவற்ற அகமகிழ்ச்சி பெற முடிந்ததோ,

அந்தப் பணியினை முன்புபோலச் செய்ய முடியாத வனாக்கப்பட்டு, முடியவில்லையே என்ற ஏக்கத்தால் தாக்கப்பட்டு, சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டுக் கிடக்கிறேன் என்பதனை அறிவாய்.

“சூழ்நிலையின் கைதி’ — என்ற சொற்றொடருக்குத்தான், முதலமைச்சர் என்று முத்திரையிட்டிருக்கிறார்கள்.

தம்பி! தம்பி! தம்பி! — என்று கிழமை தவறாமல், பலப் பல ஆண்டுகள் உன்னை அழைத்து உரையாடி அளவளாவி வந்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளாக அந்த விருந்தினை இழந்து தவிக்கின்றேன்.

முதலமைச்சர் என்ற முறையில் பல பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை அறிக்கைகள், சொற்பொழிவுகள், சட்டமன்ற உரைகள் மூலம் நாட்டுக்குத் தந்துவிட முடிகிறது — தனிமையாக உன்னிடம் உரையாடி மகிழ்ந்திட என்று நான் வகுத்துக்கொண்ட “கிழமைக் கடிதம்’ எழுதிட இயலவில்லை.

பிரச்சினைகளை விளக்கிட, ஐயப்பாடுகளைப் போக்கிட, அச்சம் துடைத்திட, மறுப்புக்கு மறுப்புரைக்க, “வாழ்க வசவாளர்’ என்று அவர்களையும் வாழ்த்திட, “தம்பிக்குக் கடிதம்’’ மிக நேர்த்தியான முறையில் பயன்பட்டு வந்தது.

எனக்குத் தோன்றும் எண்ணங்களை உன்னிடம் கூறிடுவதிலே, தனியானதோர் மகிழ்ச்சி.

எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியினை உன்னோடு பங்கிட்டுக் கொள்வதிலே ஓர் இன்பம்.

கவலை குடையும்போது, மன உளைச்சல் ஏற்படும்போது, உன்னோடு உரையாடி, தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற எழுச்சி பெற்று வந்தேன்.

இப்போது? அந்த இன்ப நாட்களை எண்ணி எண்ணி ஏக்கம் கொள்கிறேன். சுமக்கும் பளுவினாலே கூனிக் குறுகி வாடுகிறேன். எத்தனை எத்தனையோ பிரச்சினைகளைப் பற்றிய கருத்துக்களைக் கூற நேரமோ வாய்ப்போ இன்றித் தவித்திடுகிறேன்.

ஆயினும், முன்பு செலவிட்டதைக் காட்டிலும் அதிக நேரம், வேலைக்காக ஒதுக்குகிறேன். இலக்கியச் சுவை நுகர்ந்திட நேரமில்லை. கலை அழகினை எண்ணிட நேரமில்லை. வேலை! வேலை! வேலை! ஓயாத வேலை! உடலும் உள்ளமும் அலுத்துப் போகும் அளவு. கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கவே காலம் போதவில்லை — களிப்புப் பெற்றிட உன்னிடம் உரையாடிட நேரத்தைக் கண்டறிவதே மிகச் சங்கடமாகிவிட்டது.

இந்தக் கிழமை எப்படியும் தம்பிக்குக் கடிதம் எழுதிட வேண்டும் என்று தீர்மானித்து எழுதத் தொடங்குவேன். தொலை பேசி மணி ஒலிக்கும். . .

சீப் பா. . .

ஆமாம், நான்தான். . .

எங்க ஊர் வாய்க்கால் விஷயமாக மனு அனுப்பினது பற்றி. . .

பரிசீலனையில் இருக்கிறது.

அண்ணா! நீங்க பார்த்து முடிவு செய்யவேண்டியது தானே, இதற்கு என்ன பரிசீலனை தேவை?

அப்படி அல்லவே. இலாக்கா பரிசீலனை செய்தாக வேண்டுமே. . .

அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. . . . எப்படியும் முடித்துக் கொடுத்தாக வேண்டும்.

சரி, சென்னைக்கு வரும்போது விளக்கமாகக் கூறுகிறேன்.

உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா!

ஆகட்டும். ஆகட்டும்!

வேலைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். இளைப்பும் களைப்பும் அதிகமாகத் தெரிந்தது போன மாதம் பார்த்தபோது.

தம்பி! என் மனத்துக்கு இனிமை தந்திடும் பணியிலே என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லையே என்ற கவலை ஒரு புறம்; அத்துடன் பின்னிப் பிணைந்துகொண்டு என் உடல் நிலையைப்பற்றிய கவலை ஒரு புறம்.

என் பேரப் பெண், இளங்கோவனின் மகள் கண்மணி தன் மழலை மொழியில் பாடுகிறாள்.

நலந்தானா? நலந்தானா?
உடலும் உள்ளமும்
நலந்தானா?

என்று. எனக்கென்னவோ அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், என் தம்பிகள் தங்கைகள் நாட்டின் நல்லோர் அனைவருமே என்னை நலந்தானா? என்று கேட்பதுபோலவே தோன்றுகிறது. கடந்த ஓராண்டாகவே, இந்தக் கேள்வி கிளம்பியபடி இருந்தது. அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளவேண்டிய அளவுக்கு உடல் நலம் பாழ்பட்டது. ஆனால், அதனால் ஏற்பட்ட கவலையை நான் உதறித் தள்ளும் விதமான அன்பும் கனிவும் நாடு முழுவதிலுமிருந்து கிடைத்தது. அரசியலில் நம்மோடு மாறுபட்டிருப்பவர்களிலே பலரும் கனிவு காட்டிடக் கண்டேன் — மனிதத் தன்மை அடியோடு மடிந்துவிட வில்லை என்பதனை உணர்ந்தேன்.

தம்பி! அந்த மனிதத் தன்மையிலேதான் முழுக்க முழுக்க நம்பிக்கைக்கொண்டிருக்கிறேன். மனிதத் தன்மை திகழ்ந்திடச் செய்வதைக் காட்டிலும் மகத்தான வேறோர் வெற்றி இல்லை என்றே கருதுகிறேன். அரசுகள் அமைவதே, இந்த மனிதத் தன்மையின் மேம்பாட்டினை வளர்த்திடத்தான் என்று கருதுகிறேன். என்னால் எந்தப் பிரச்சினையையும் மனிதத் தன்மை கலந்ததாக மட்டுமே கொள்ள முடிகிறது. அதனால் கொடுமை நேரிட்டுவிடும்போது குமுறிப் போகிறேன். அக்ரமம் நடைபெற்றிடும்போது நெஞ்சில் வேல் பாய்கிறது. இந்நிலை உடலைப் பாதிக்கிறது; மருத்துவர்கள் பலர் என் உடல்நிலை தேறிடத் துணை நிற்கின்றனர். ஆனால், உன் புன்னகை தவழும் முகத்தை மனக் கண்ணால் காணும்போதுதான் உண்மையான “மாமருந்து’ கிடைக்கிறது. கிடைத்தற்கரிய அந்தச் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கிலே திளைத்திருக்க எண்ணும் என்னை, தம்பி! நான் மேற்கொண்டுவிட்ட “கடமை’ வேலையைக் கவனி! வேலையைக் கவனி! என்று முடுக்குகிறது.

இன்று எப்படியும் எழுதுவது — ஆண்டுக்கோர் நாள் — அருமைமிகு திருநாள் — பொங்கற் புதுநாள் — அதற்காக வெளிவரும் மலரில் எப்படியும் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டு ஏடெடுத்தேன் எழுத! எடுத்து?

நிதிக் குழுவினருடன் பேசவேண்டிய பிரச்சினைகளைப் பற்றிய தகவல்களுடன் நிதித்துறைச் செயலாளர், அமைச்சர் மாதவனுடன் வந்தார்! ஒரு மணிக்குமேல் உருண்டோடிவிட்டது — சிக்கலான பிரச்சினைகள் — பேசித் தீர்த்தாகவேண்டிய பிரச்சினைகள் — நமது மாநிலத்து வருவாய்த் துறையை எந்தெந்த முறையிலே செப்பனிட முடியும் என்பதுபற்றி ஆய்ந்தறிய வேண்டிய கட்டம். உன்னை மறந்தேன் என்ற பொருள் கொள்வாயோ! விவரமறிந்த தம்பியாயிற்றே!! உனக்காகவும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிற வேலை என்பதனை அறிவாயே. பிரச்சினைகளைப் பேசினோம். புள்ளி விவரங்களைச் சரிபார்த்துக்கொண்டோம். தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றிய முறைகளை வகுத்துக்கொண்டோம்.

அதற்குப் பிறகுதான் எழுத ஆரம்பித்தாயா அண்ணா? என்றுதானே கேட்கிறாய்.

அதற்குப் பிறகு அல்ல, தம்பி! அதைப்போல மூன்று நான்கு தவிர்க்க முடியாத வேலைகளைக் கவனித்தான பிறகு, எழுத வேண்டும் என்ற முடிவு எடுத்ததற்கும் எழுதத் தொடங்கியதற்கும் இடையில் ஆறு ஏழு மணி நேரம் சென்றுவிட்டது. இந்நிலையில் நான் இருந்திடினும் பொங்கற் புதுநாள் வாழ்த்தினைத் தெரிவித்துப் பெற்றிடும் மகிழ்ச்சியினை மட்டும் நான் இழந்து விடமாட்டேன். நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா அல்லவா அது. எத்தனையோ இன்னல்கள் தாக்கிடினும், அவைகளை மறந்து, ஒரு நாள் மனைதொறும் மனைதொறும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட என்று அமைந்த நாளல்லவா பொங்கற் புதுநாள். பேச்சிலே ஓர் இசை கலந்திடும் நாள் இத்திருநாள்! இந்நாளில், உனக்கு வாழ்த்துக் கூறுவதிலே பெற்றிடும் இன்பம் ஈடற்றதல்லவா? எனவேதான், எப்படியும் எழுதுவது என்று உட்கார்ந்தேன்.

உலக நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை ஒரு முறைக்கு மும்முறை கண்டு வந்தேன். அங்கு எங்கும் — விழாக்கள் பலப் பல நடாத்தப்படினும் — தமிழகத்தின் பொங்கற் புதுநாள் போன்றதோர் பொன்விழா இல்லை. நிச்சயமாக இல்லை. கோலாகல விழாக்கள் உள்ளன; பரபரப்பூட்டும் விழாக்கள் நடத்தப்படுகின்றன; கேளிக்கைகள், மதுபான விருந்துகள் மிகுதியாக; எனினும் ஆர்ப்பரிப்பின்றி ஆனால் அக மகிழ்ச்சியுடன், போலிப் பூச்சுகளின்றி ஆனால் புதியதோர் பொலிவுடன், வீட்டில் உள்ள அனைவரும் கலந்துரையாடி மகிழ்ந்திருக்கும் நமது பொங்கற் புதுநாளுக்கு ஒப்பான விழா அங்கு எங்கும் இல்லை. நாட்டியக் கூடங்களிலே அமளி! பாதைகளிலே புதுவேகம், மோதல், உயிர்ச் சேதம்! அங்காடிகளிலே ஆரவாரம்! இவைகள் ஏராளமான அளவு! ஆனால் இங்கு வீடுதோறும் எழுகிறதே! முதியவரும் மூதாட்டியும் இளைஞரும் இளநங்கையும், சிறுமியரும் கலந்து எழுப்பும் பொங்கலோ! பொங்கல்! என்ற இசை, அது அங்கு எங்கும் இல்லை. இருந்திடத்தக்க விதமான சமூக அமைப்பே இல்லை.

தம்பி! வறுமை வாட்டுகிறது, இல்லை என்று கூறவில்லை. எண்ணிடும் திட்டங்களை நிறைவேற்றிட வசதிகள் கிட்டவில்லை. அதனை மறைத்துப் பயனில்லை. வளம் கொழித்திட வழிதேடிய படிதான் இருந்து வருகிறோம். இன்னும் பொழுது புலரவில்லை. இவ்வளவும் உண்மை. ஆனால் தமிழகத்தில் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்து நாடு பல, தனது எல்லையை வகுத்துக் கொண்டு அரசு அமைத்துக் கொண்டு நிலவத் தொடங்குவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே, நாம் பெற்றிருந்த கருத்துச் செல்வத்தை எண்ணிப் பார்த்திடும் போது, நமக்கு இன்றுள்ள எல்லாத் துயரங்களையும் ஒரு கணம் மறந்து, வேறு எவரும் பெற முடியாத ஓர் பெருமித உணர்வினை நாம் பெற முடிகிறது.

அத்தகைய கருவூலத்தை நமக்குத் தந்த தமிழ் நாட்டுக்கு, நாம் இதுநாள் வரையில் அரசியல் சட்ட திட்டத்தில், தமிழ் நாடு என்ற பெயரைக்கூடப் புகுத்தத் தவறினோமே, மறுத்து வந்தோமே, எதிர்த்து வந்தோமே என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணி வருத்தப்படுகிறார்களோ இல்லையோ, நானறியேன் — நாம் — இவர்களால் என்ன ஆகும்? என்ற ஏளனக் கணைகளால் தாக்கப்பட்ட நாம் — நாம் ஆட்சிப் பொறுப்பினை பெற்றதன் விளைவாக இந்தப் பொங்கற் புதுநாளிலிருந்து, நாம் உலகுக்கு அறிவிக்க முடிகிறது, இது தமிழ் நாடு என்பதாக. பெயரில் என்ன இருக்கிறது என்று பேசிடும் பெரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் — ஆனால் பாடினாரே பாரதியார்,

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே!

என்று. அந்த “கவிதா வாக்கியம்’ பெரிய இடத்தில் அமர்ந்து கொண்டு “சின்னத்தனம்’ பேசிடும் பலருடைய ஏளனத்தைப் பொருட்படுத்த வேண்டாம். உயர்ந்த எண்ணம் கொள்! என்றன்றோ கட்டளையிடுகிறது. “நாம்’ தமிழ்நாடு என்ற பெயர் பெற்றிடக் காரணமாக இருந்தோம் என்ற தித்திப்புக் கலந்திடும் பொங்கற் புதுநாள், இந்த ஆண்டு.

போதும் என்று நான் கூறவில்லை. அத்துணைப் பேதமை என்னைப் பிடித்தாட்டவில்லை.

தமிழகத்துக்கு வளமளிக்கவேண்டிய பருவ மழை தவறி விட்டது. ஏரி குளம் குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. வயல்கள் வெடித்துக்கிடக்கின்றன. பல மாவட்டங்களில் எண்ணிடும் போதே கவலையும் கலக்கமும் மிகத்தான் செய்கிறது. எனினும் இந்த நிலையை மனத்திலே எண்ணி, இதம்தரும் பல செயல்களை அந்த இடங்களிலே மேற்கொள்ளும்படி திட்டமளிக்கப்பட்டிருக்கிறது.

“தமிழ் நாடு’ — என்ற பெயர் கிடைப்பதால் கிடைத்திடும் பெருமிதம் காலமெல்லாம் நிலைத்து நிற்கும்; நமது வழிவழி வருவோருக்கெல்லாம் நம்மைப்பற்றி அறிவிக்கும்; வரலாற்றில் இடம் பெறும்; பருவமழை தவறுவதும் வறட்சி மிகுவதும் பஞ்ச நிலை தலை தூக்குவதும் என்றென்றும் இருப்பதல்ல; திங்கள் சில.

எனவேதான், தம்பி! எப்போதுமே எழுச்சியுடன் நடாத்திடும் பொங்கற் புதுநாளை இவ்வாண்டு புதியதோர் எழுச்சியுடன் கொண்டாடிடக் காரணம் இருக்கிறது என்பதனை நினைவு படுத்துகின்றேன்.

உடையார்க்கே, — விழாவெல்லாம் ஏழையர்க்கு ஏது? என்ற கேள்வியிலே தொக்கியுள்ள நியாயத்தை நான் மறுப்பவனல்ல. தமிழக முழுவதும் விழாக்கோலம் கொள்ளக்கூடிய விதமான வளம் கொழித்திட வேண்டும் என்று விரும்புகிறேன்; அதற்கான வழிகள் யாவை என்பதுபற்றி ஆய்வாளர்களிடம் அறிவுரை கேட்டுப் பெறுகிறேன்; திட்டம் பல தீட்டப்படுகின்றன; ஆனால், அவைகளை நிறைவேற்றத் தேவைப்படும் பணம், இந்தியப் பேரரசிடமல்லவா முறையிடவேண்டி இருக்கிறது. முறையிடு கிறேன் — கனிவும் பணிவும் குறையாமல்; வம்வு வல்லடிப் போக்கு துளியுமின்றி — ஆனால் கிடைக்கிறதா? நிரம்ப காரணங்கள்! நியாயங்கள்! வாதங்கள்! எதற்கு?

இவ்வளவுக்கு மேல் பணம் தருவதற்கு இல்லை என்பதற்கு! என் செய்வேன்? அண்ணன் ஏன் எப்போதும் கவலைப்பட்டபடி இருக்கிறான் என்று சில தம்பிகள் கேட்கவே செய்கிறார்கள். நான் கவலைப்படாமல் எப்படி இருக்க முடியும்?

ஆகவேதான் மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங் களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதுபற்றி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக் கூறி வருகின்றேன்.

இதற்கான நல்லாதரவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கிறது என்பதிலே எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி. நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும் இப்போது இதனை வலியுறுத்த முன்வந்துள்ளன. அரசியல் கட்சிகளைச் சாராத அறிவாளர் பலரும் இதற்கு ஆதரவு காட்டுகின்றனர். “நாம்’ அரசு நடாத்தியதால் கிடைத்திருக்கின்ற நற்பலன்களிலே இதனை ஒன்று என்றே நான் கருதுகின்றேன்.

தமிழகத்தின் தனித் தன்மைகள், சிறப்புகள் குறித்துப் பேசுவதனையே இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடு பயப்பதாகும் என்று பேசுவார் உளர் இங்குகூட! அங்கு உள்ளவர்கள் அக மகிழ்வார்கள் என்ற நினைப்பினர்!

தமிழகத்திற்கென்று இருக்கின்றனவே தனிச் சிறப்புகள் — என் செய்வது? எப்படி மறப்பது? எப்படி மறைப்பது?

யாதும் ஊரே; யாவரும் கேளிர்
பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்
மெய்ப் பொருள் காண்பது அறிவு
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு

இவைகளை எங்ஙனம் மறந்திட இயலும்? வேறு எங்கும் இந்த எண்ணம் ஏற்படாத நாட்களில் இவை தமிழகத்திலே மலர்ந்தன என்ற உண்மையை எப்படி மறைக்க முடியும்? ஏன் மறைக்க வேண்டும்?

சிலர் எதிர்க் கூச்சலைக் கிளப்பியபடி இருப்பினும், இன்றையத் தமிழர், தமிழகத்தின் தனிச் சிறப்பினை பெருமளவிற்கு உணர்ந்து எழுச்சி பெற்று வருகின்றனர். தமிழகத்து வரலாற்றுத் துறையிலும், இலக்கியத் துறையிலும், பண்பாட்டுத் துறையிலும் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படின் தமிழரின் தனிச் சிறப்புகள் முழு அளவு கிடைக்கப்பெறும் என்பது மட்டும், அதனைத் தரணி அறிந்து போற்றிடத்தக்க வாய்ப்பும் மிகுந்திடும்.

இப்போதே, அமெரிக்க ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் பல, தமிழ்த் துறைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழரின் தனிச் சிறப்புகளை ஆய்ந்தறியும் ஏற்பாடு, இங்கு இன்னமும் போதுமான அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை. உலகமே ஏற்றுக்கொண்ட உயர் நூலாம் திருக்குறளுக்கான ஆராய்ச்சியேகூட அல்லவா இங்கு மேற்கொள்ளப்படாமலிருந்து வந்தது?

“இதுகள்’ என்ற ஏளனத்தைச் சுமந்துகொண்டிருக்கும் “நாம்’ ஆட்சி நடத்தத் தொடங்கியதன் தொடர்பாக நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிலே திரட்டிய பணத்தில் ஒன்பது இலட்சம் வெண் பொற் காசுகளைக் கொடுத்தல்லவா மூன்று பல்கலைக் கழகங்களையும் திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபடும்படி ஊக்குவித்திருக்கிறோம்.

வேறெல்லா விழாக்களும், “போகும் இடத்திற்காக’’ — பொங்கற் புதுநாள் இருக்கும் இடத்திற்காக என்பதனைத் தம்பி! ஆண்டு பலவாக நீ எடுத்துக் கூறி வந்திருக்கின்றாய்.

துவக்கத்திலே இது கேட்டு வெகுண்டெழுந்தோ ரெல்லாம் கூட, இப்போது உண்மைதானே! என்று கூறிட முன்வந்துள்ளனர். பொங்கற் புதுநாளை ஒட்டி, தம்பி! உன்னால் இயன்ற அளவுக்கு, தமிழரின் தனிச் சிறப்புகளைக் குறித்து எடுத்துரைக்கும் பணியிலே ஈடுபடக் கேட்டுக்கொள்கிறேன். நீ முயன்றால் முடியாததும் இருக்கிறதா! என்னையே முதலமைச்சர் ஆக்கிவிட முடிந்திருக் கிறதே உன்னால் — வேறு எதுதான் செய்திட உன்னால் முடியாது? முயன்றிடு! முனைந்திடு!

போலிப் பெருமைத் தேடிக்கொள்ளவோ, நாட்டின் பிற பகுதிகளைத் தரக்குறைவாகக் கருதுவதற்காகவோ அல்ல தம்பி! தமிழகத்தின் தனிச் சிறப்புகள் பற்றி நாம் அறிந்திட வேண்டும், அக மகிழ்ந்திட வேண்டும், எழுச்சி பெற்றிட வேண்டும் என்று நான் கூறுவது, பிற பகுதிகளும், உலகின் பல்வேறு நாடுகளும் கேட்டு இன்புறத்தக்க, அறிந்து மேற்கொள்ளத்தக்க பண்பாடு நம்முடையது, அத்தகைய கருவூலத்தை இழந்துவிடுவது நமக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல உலகுக்கே நட்டம் என்பதாலேயே, தமிழகத்துத் தனிச் சிறப்பு இயல்புகளை நாம் நன்கு அறிந்திட வேண்டும் என்று கூறி வருகிறேன். குறுகிய மனப்பான்மை என்கின்றனர் இதனை. அவர்கள் குறைமதியாளர் என்று கூறிடத் தோன்றுகிறது. பண்பாடு அந்த உணர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது. பிளவு மனப்பான்மை என்றும்கூடக் கூறுவார் உளர்! எதனை என்று பார்த்திடும்போது சிரிப்பே வருகிறது.

யாதும் ஊரே
யாவரும் கேளிர்

என்ற பண்பாட்டினை எடுத்துக் கூறுவது, பிளவு மனப்பான்மை யாமே! யாழ், காது குடைச்சலை உண்டாக்குகிறது; தேன் குமட்டலைத் தருகிறது, தென்றல் வெப்பத்தை மூட்டுகிறது என்று கூறுவதுபோல அல்லவா இருக்கிறது, தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பினை எடுத்துக் கூறுவது பிளவு மனப்பான்மையை மூட்டிவிடும் என்று கூறுவது? கூறுகின்றனர், உரத்த குரலிலேகூட! உயர்ந்த இடத்திலே இடம் பெற்று விட்டவர்களும்! ஆயின் என்ன? மிகப் பெரிய இடத்திலே உள்ளவர்கள் கூறுகின்றனரே, அவர்தம் கருத்துக்கு மாறாக நாம் நடந்துகொள்ளப்போமா என்ற எண்ணம் எழும்போது தம்பி!

நெற்றிக் கண்ணைக்
காட்டிடினும்
குற்றம் குற்றமே!

என்பது செவியினில் வீழ்கிறது. உண்மையை உரைத்தாக வேண்டும் என்ற உறுதி பிறக்கிறது.

வான்கோழி கண்டால் வருத்தப்படுமே என்று எண்ணித் தோகையை கீழே உதறிப் போட்டுவிடுமா கலாப மயில்? காக்கைக்கு வருத்தமாக இருக்குமே என்பதற்காகப் பச்சைக் கிளி கருப்புப் பூச்சைத் தேடிக்கொண்டிருக்குமா? பிற நாடுகளும், நமது நாட்டின் பிற பகுதிகளும் பெற்றிராத கருத்துக் கருவூலத்தைத் தமிழகம் பெற்றிருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுவது எந்த வகையிலும் தவறு அல்ல. எத்தகைய தீமையும் தந்திடாது எவருக்கும்.

தமிழரின் தனிச்சிறப்பினை அறிந்திடப் பயன்படும் நமது இலக்கியச் செல்வத்தை நினைவிற்கொள்ளவும், மற்றையோர்க்கு எடுத்துக் கூறவும் பொங்கற் புதுநாள் ஏற்றது என்பதாலேயே பெரியோர்கள் இதனைத் தமிழர் திருநாள் என்றழைக்கின்றனர்.

பழம் பெருமை பேசிப் பெருமூச்செறிந்துகொண்டே செயலற்று இருப்பதல்ல நமது குறிக்கோள். செய-னால் பெற்றிடும் செழுமையை எடுத்துக் காட்டிடும் நன்னாளாம் பொங்கற் புதுநாளில், செயலார்வம் மிகுந்திடுவது இயல்பு. செயலும் செம்மையானதாக அமைந்திட வேண்டும், பயனும் சமூகம் முழுவதற்கும் கிடைத்திடத்தக்க முறை கண்டாக வேண்டும். வெள்ளம் அழித்திடும்; — வாய்க்கால் வளமூட்டும், செல்வம் சிலரிடம் சென்று குவித்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது. அது கொண்டவனையும் அழித்திடும், சமூகத்தில் வலிவற்றோரையும் அழித்திடும். எனவேதான் — சிந்தனையாளர், செல்வம் பெருக்கிட வேண்டும். அஃது முடக்கப்படாமல் சமூகம் முழுவதற்கும் பயன் அளிக்கக்கூடிய வழிமுறை கண்டாக வேண்டும் என்று எடுத்துக் கூறினர். நமது அரசுகூட அந்தச் சமதர்ம இலட்சியத்தைப் போற்றுகிறது; நமது கழகம் சமதர்ம நெறியிலே நம்பிக்கையும் நாட்டமும் கொண்டிருக்கிறது. ஆனால், நடைமுறைக்குள் புகும்போது, தம்பி! ஆயிரம் ஆயிரம் தடைகள் எதிர்ப்புகள், ஆபத்துகூட!

ஆண்டவனே! ஏனோ எனக்கு இந்தச் சோதனை, இத்துணை வேதனை என்று ஏழை இறைஞ்சுகிறான். செல்வவான், ஆண்டவன் அருளால் நான் பெருநிதி பெற்றேன். இதனைக் குறை கூறுவது தர்மமா? என்று நியாயம் பேசுகிறான்.

மொரேவியா நாட்டில், பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்? என்றோர் பழமொழி உண்டு.

இந்த நிலை கண்டு மனம் வெதும்பிய நிலையில், பொங்கலாம் பொங்கல்! யாருக்கு? ஏழைக்கு ஏது அந்த இன்பம்? — என்று நமது இளங்கவிஞர்கள் கேட்கின்றனர். அந்தக் கேள்வியிலே உருக்கமும் இருக்கிறது உண்மையும் இருக்கிறது.

இந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பிக் கவிஞர் இராஜேந்திரன்.

தைத்திங்கள் வருகின்ற பொங்கல் நாளில்
தங்கத்தைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கும்
நெய்ப்பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சிகொள்வர்
நிதிபடைத்த சீமான்கள் என்றும் எங்கள்
கைதொட்டு வாய்பட்டதுண்டோ பொங்கல்
கண்மட்டும் ஓயாமல் பொங்கும்! பொங்கும்!
தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கு இல்லை
தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?

என்று கேட்டிருக்கிறார். மிகைப்படுத்திக் கூறுகிறார் என்று எவரும் கூறிடார்! ஏழ்மை நெளிகிறது! அதிலும் வளம் பெற்றளிக்கும் பாட்டாளிகளிடம்! இது நீதியல்ல; தமிழர் நெறியுமாகாது. இந்நிலை மாறிட, எல்லோர்க்கும் வாழ்வில் இன்பம் கிடைத்திட நாம் ஒவ்வொருவரும் தத்தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பிற்கு ஏற்ற முறையில் பணியாற்றிட வேண்டும். தமிழர் திருநாளில் தமிழர் அனைவரும் களிப்புடன் கலந்துகொள்ளத் தக்கதான சமுதாய அமைப்பு முறை காணப் பாடுபட்டாக வேண்டும். உவகை தந்திடும் இந்நாளில் இதற்கான உறுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நிலை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா எங்கணும் இருந்திடக் காண்கின்றோம்.

இந்தியாவின் தொழில் பொருளாதாரம் 20 இலட்சம் பங்குதாரர்களின் கையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 500 முக்கிய கேந்திரத் தொழில்கள், நிதி ஸ்தாபனங்கள், கம்பெனிகளில் எடுத்துப்பார்க்கும் போது அவற்றில் 3,128 டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை யார் என்று உற்றுக் கவனித்தால் 1,013 பேர்கள்தான் இந்த 500 கம்பெனிகளில் டைரக்டர்களாக இருக்கிறார்கள் என்பது புலப்படும். இந்த 1,013 டைரக்டர்கள் யார் என்று கவனித்தால் அவர்களில் 800க்கு மேற்பட்டவர்கள் 20 குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அவர்களுக்கு உட்பட்டவர்களாகவோ இருப்பதைச் சுலபத்தில் காணலாம். இந்த 20 பெரிய திமிங்கலங்கள் பாங்குகளையும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளையும் நிர்வகிப்பதன் மூலமாகவும், நம் தொழில், பொருளாதாரத்தின் தன்மையையும், வேகத்தையும், போக்கையும் நிர்ணயித்து நிர்வகிக்கும் சக்தி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்!

என்று அசோக்மேதா சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். இன்றைய நிலை, அதனைவிட மோசம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் இதனை மாற்றி அமைத்திடத்தக்க முறைகளை நமக்கு இந்திய அரசியல் சட்டம் போதுமான அளவுக்கு அளிக்கவில்லை. எனவேதான் எங்களுக்கு ஏது பொங்கல்? என்று ஏழை கேட்கும் நிலை நீடிக்கிறது.

ஆனால் தம்பி! மனம் வெதும்பி இதுபற்றிக் கூறிய கவிஞரே, பிறகோர் இடத்தில்,

தைத் திருநாள் வருகை பார் தம்பி! வெல்லத்
தமிழ் உள்ளம் தனில் இன்ப வெள்ளம் சேர்க்கும்
மெய்த்திருநாள் மேன்மை பார்! அறிவை வாட்டி
மெலியவைக்கும் தேவையற்ற பண்டிகைகள்
பொய்த்தினிமேல் போய்விடும்! பார் வானில் பாயும்
புலிச்சின்னப் புகழ் மன்னன் கரிகாலன்றன்
கைத்திருவாள் வெளிச்சம்போல மின்னுகின்ற
கதிர்மணியின் குவியல் பார்! கரும்பைப் பார்!

என்று எழுச்சியுடன் பாடுகிறார். தமிழ் கற்றுணர்ந்தவர்கள் அனைவருமே இதுபோலத்தான்; சமூகத்தில் மூட்டிவிடப் பட்டுள்ள கேடுகளைக் கண்டு மனம் வெதும்பினாலும், பொங்கற் புதுநாளை மட்டும் தமிழர் தமது திருநாளாகக்கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துரைத்து வருகின்றனர். காரணம் மற்றைய பல விழாக்கள்,

கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

நாம் வந்த வழி அது.

இங்குத் துன்பம், அங்கு இன்பம் கிட்டும்.

என்ற எண்ணங்களுக்கு முதலிடம் தருவன. தமிழர் திருநாளாம் பொங்கற் புதுநாள் தனித்தன்மை பெற்றது.

உழைப்பே செல்வம்
உழைப்பே உயர்வு
உழைப்பின்றி உலகு இல்லை!

என்பன போன்ற நற்கருத்துக்களைத் தருவதாக அமைந்திருக்கின்றது.

பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்றுவிடுவது காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டிவிடுகிறது.

தம்பி! செல்வச் சீமானின் மகன் — இளைஞன் — எப்படி நடந்துகொள்கிறான் என்பதனை நன்கு அறிவாய் அல்லவா? அறிந்திருக்கிறாய் என்றாலும், இதோ நான் தந்துள்ள காட்சியையும் பார்த்திடு — சமூகத்தின் நிலை நன்கு புரிந்திட வாய்ப்புக் கிடைக்கும்.

இடம்:- லிலி கிளப்

இருப்போர்:- கண்ணாயிரம், கோடீஸ்வரன், காதர் மற்றும் பல நண்பர்கள்.

நடப்பது: லிலி கிளப், சீமான் வீட்டுப் பிள்ளைகள் பொழுது போக்குவதற்காக உள்ள இடம். ஆகையால் அங்குச் சீட்டாட்டம் ஒரு புறம், பூப்பந்தாட்டம் மற்றோர் புறம், ஆங்கில முறை நடனம் வேறோர் புறம், விருந்து இன்னோர் புறம் இப்படி இருக்கிறது.

பூந்தோட்டப் பக்கமாகப் போடப்பட்ட நாற்காலி களிலும் சாய்வு நாற்காலிகளிலும் உட்கார்ந்துகொண்டு கண்ணாயிரமும் அவன் நண்பர்கள் சிலரும் சிகரெட் புகைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

காதர்: எனக்கு வர வர, இந்தக் கிளப் பிடிக்கவில்லை. ஒரே களியாட்ட மயமாகிவிட்டது. இதிலேயே நாம் முழுகி விடுகிறோம். உலகிலே மனிதர்களாகப் பிறந்தவர்கள், ஏதாவது ஒரு பயனுள்ள வேலையைச் செய்தே ஆக வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். . .

கோடீஸ்வரன்: எந்தப் புத்தகத்திலே படித்தாயப்பா இதை?. . .

காதர்: புத்தகம் கிடக்கட்டும், நமக்கென்று சிந்திக்கிற சக்தி இருக்கிறதே. அது போதுமே, இதைப் புரிந்துகொள்ள. . .

கண்: என்ன சொல்கிறார், காதர்!

கோடீ: கடினமாக உழைக்கச் சொல்கிறார்.

கண்: உழைக்கட்டும், உழைத்தே தீரவேண்டியவர்கள். . .

காதர்: எல்லோருக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன். உழைக்காமல் வாழ்பவன் சமூகத்தைச் சுரண்டிப் பிழைக்கிறான் என்றுதான் பொருள். அதாவது. . .

கண்: புரிகிறது, புரிகிறது! வியாக்யானம் வேண்டாம். தத்துவம் பேசுகிறாய். தாராளமாகப் பேசு. . . தேவையுள்ளவர்கள் அதன்படி நடந்துகொள்ளட்டும். . . .

கோ: அட, உனக்கும் சேர்த்துத்தான் சொல்கிறான் காதர், தெரியவில்லையா? வெறும் பொழுதை ஓட்டிக்கொண் டிருக்கிறாயாம். . . கடினமாக வேலை செய்ய வேண்டுமாம்…

கண்: ஏதோ எனக்கென்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர்! நான் ஒன்றும் அலைந்து திரியவேண்டிய அவசியம் இல்லை. நிம்மதியாக வாழ எனக்கு வசதி இருக்கிறது. ஆண்டவன் அப்படி ஒன்றும் என்னை உழைத்து உருக்குலையும்படியான நிலையிலே விட்டுவைக்கவில்லை. வாழ்வதற்காக வதைபடு என்று என் தலையில் ஒன்றும் எழுதியில்லை. . .

(காதர், அந்தப் பேச்சுக் கேட்டுத் திகைத்துக் கிடக்கிறான். இரண்டோர் விநாடி கழித்து விடைபெற்றுக் கொண்டு செல்கிறான். அவன் மறையும் வரையில் பார்த்துக்கொண்டிருந்து விட்டு)

கோ: கண்ணாயிரம்! காதர் யார் தெரியுமல்லவா உனக்கு? கான் சாகிப் சாதுல்லாவுடைய பேரன். கான் சாகிப்புக்கு மலாயாவிலே தோட்டக்காடு நிரம்ப. அந்த வருவாய் வந்து கொண்டிருந்தது. அதை வைத்துக்கொண்டு சுல்தான் — அதாவது காதருடைய அப்பா, இவனைச் செல்லமாகத்தான் வளர்த்து வந்தார். போன வருஷம் ஒரு பெரிய ஆபத்து; சுல்தான் மறு க-யாணம் செய்துகொண்டார்; குழந்தை பிறந்திருக்கிறது; காதர் வருத்தப்படாமலிருக்க முடியுமா?. . . அப்பனோடு சண்டை! சின்னம்மா சாகசக்காரி — அந்தச் சண்டையை அதிகமாக்கி விட்டுவிட்டாள். காதர் இப்போது சொந்தத்திலே மாவு மில் நடத்துகிறான்.

கண்: அப்படிச் சொல்லு. . . . அதனால்தான் வரட்டு வேதாந்தம் பேசுகிறானா? நாம் சற்று பச்சென்று இருப்பது அவனுக்கு இப்போது பிடிக்கவில்லை. . . . இவனுக்குப் பணக் கஷ்டம்; அந்தச் சமயத்திலே, நான் பணத்தைத் தாராளமாகச் செலவழித்து, ஆனந்தமாக இருப்பதைக் கண்டு இவனுக்கு மனம் பொறுக்கவில்லை. . . .

கோ: என்ன கண்ணாயிரம்! இதுதான் சாக்கு என்று என்னமோ பிரமாதமாகப் பேசுகிறாய் உன் தாராளச் செலவுபற்றி.

கண்: (வேடிக்கையாக) அடப்பாவி! நேற்று மட்டும் பால் டான்சுக்காக ஆயிரம் செலவிட்டேனே. . .

கோ: உன் அந்தஸ்துக்கும் செல்வத்துக்கும் இது ஒரு பிரமாதமா? நேற்றுத் தோன்றியவர்களெல்லாம் ஷெவர்லேயில் போகும்போது, நீ ஏன் ரோல்ஸ் ராயில் போகக்கூடாது. சாதாரணப் பயலெல்லாம் “ரேஸ்’ கிளப்பிலே ஆயிர ரூபாய் நோட்டை அலட்சியமாக வீசி எறிகிறான். நூறு ரூபாய் நோட் எடுப்பதென்றால் உனக்குக் கை நடுக்கம் எடுக்கிறது! உன் அந்தஸ்துக்கு ஏற்றபடியா உடை இருக்கிறது. ட்வீட் இல்லாமல் டாக்டர் தாமோதர் வெளியே கிளம்புவதில்லை; உன் உடையைப் பார்! செச்சே! என்ன இருந்தாலும் நீ இப்படிச் செல்வ நிலைக்குக் குறைவாக, மட்டமாக, வாழ்க்கை நடத்தக்கூடாது. மதிக்க மாட்டார்கள். என்னடா மகாப் பிரமாதம்! அவன் பெரிய புள்ளியின் மகன் என்கிறீர்கள்; அவனுந்தான் 555 பிடிக்கிறான். நானுந்தான் அதே சிகரட்! என்று ஒரு நாள் ஆபிரகாம் சொன்னான். வெட்கமாகத் தான் இருந்தது எனக்கு. நீ கஞ்சன்தான் வரவர. . . . .

(கோடீஸ்வரன் பேசிக்கொண்டிருக்கையில், கண்ணாயிரம் தன்னை நோக்கி வரும் ஒருவனை உற்றுப் பார்த்தபடி இருக்கிறான். கோடீஸ்வரனை பேச்சை நிறுத்தும்படி ஜாடை காட்டிவிட்டு.)

கண்: இரு கோடி! யாரோ, தெரிந்த ஆசாமிபோல இருக்குது… ஆமாம். . . அடே, என்கூடப் படிச்ச பய. . . இவ்வளவு சீக்கிரமா கிழவனாகிவிட்டானே.

(அடையாளம் கண்டுபிடித்த களிப்பில் அவன், கண்ணாயிரம் அருகே வந்து நிற்கிறான். கண்ணாயிரம் அவனைக் கட்டிப் பிடித்தபடி, களிப்புடன்)

கண்: வாடா, வாடா, வள்ளியப்பா! பார்த்துப் பல வருஷமாகி விட்டது. ஆமா, என்னடா இதற்குள்ளே கிழவனாயிட்டே . . . தலை நரைச்சி இருக்கு, உடல் இளைச்சி இருக்குது, முகம் கருத்துக் கிடக்குது . . . எங்கே இருக்கறே? . . . என்ன வேலை? . . . இங்கே எப்ப வந்தே? . . .

வள்: கண்ணாயிரம்! நல்லவனப்பா நீ எங்கே அடையாளம் தெரியாமல் இருக்கறியோன்னு பார்த்தேன். அடையாளம் தெரிஞ்சாலும் அலட்சியப்படுத்திவிடுவயோன்னுகூடப் பயந்தேன். . .

கண்: இடியட்! நான் அப்படிப்பட்டவனா?. . .

வள்: நீ நல்லவன்தான் கண்ணாயிரம்! ஆனா, உன்னோட அந்தஸ்து. . .?

கண்: அது பொல்லாதது என்கிறயா?. . . வள்: அப்படியும் சொல்லவில்லை. . . . ஆனா உன்னோட அந்தஸ்துக்கு நீ என்னோடு சரி சமமாப் பழக முடியா தேன்னுதான் பயப்பட்டேன். நான் இந்த கிளப்பிலே கணக்குச் சரிபார்க்க வந்திருக்கிறேன் — ஆடிட்டர்.

கோ: புதுசா ஆடிட்டர் வரப்போறதாகச் சொன்னாங்க. . . கணக்கு சுறுசுறுப்பா எழுதியபடி இருந்தாங்க. . . நீங்கதான் ஆடிட்டரா?

வள்: ஆமாம் சார்! நான்தான் ஆடிட்டர்.

கண்: டே ஆடிட்டர்! நீ கணக்கு பரீட்சையிலே மூன்று தடவை “கோட்’ அடிச்சவனாச்சே நீ எப்படிடா ஆடிட்டர் ஆகிவிட்டே? . . . . போகட்டும் சம்பளம் என்ன? கலியாணம் ஆகிவிட்டதா? குழந்தைகள்?

வள்: குழந்தைகள் நாலு பெண்ணு, இரண்டு ஆண் அப்பா. . . சம்பளம் 300 . . .

கண்: பரவாயில்லை . . . சௌக்கியமா இருக்கிறியா?. . . அதுபோதும். ஆமா இப்படி ஏன் கருத்துப்போய் இருக்கே?. . .

வள்: பெரிய குடும்பம் கண்ணாயிரம். என் மனைவிக்கு ஆஸ்த்மா, அம்மாவுக்கு டி. பி., கொழந்தைகள் ஆறு, கிடைக்கிற சம்பளம் 300 எப்படி சுகமா இருக்க முடியும்? கஷ்டந்தான் கவலைதான். . .

கண்: போடா போக்கிரி! நீ எப்பவுமே இப்படித்தான். பெரிய பாரமூட்டையைத் தூக்கிச் சுமப்பவன்போல மூக்காலே அழுகுற வாடிக்கை. . . .

வள்: உனக்கு என்னப்பா, குத்தலும் குடைச்சலும். பெட்டியிலே பணம் ஏராளமாக. வட்டி சட்டி மூலம் அதை வளர்க்கச் சரியான தந்தை இருக்கிறார். நீ சுத்தலாம் ஆனந்தமாக. விலை பற்றிக் கவலை இல்லாம, சாமான்களை வாங்கலாம்; காலத்தைப் பத்தின கவலை இல்லாம, வேடிக்கையாக இருக்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்!

கோ: வாயைப்போய் கழுவிட்டு வாங்க ஆடிட்டர்! நம்ம கண்ணாயிரத்தைப் போயி, எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்னு சொல்லிய வாயைக் கழுவியாகணும். ஆசாமி ஒரே கஞ்சத்தனம்.

கண்: சும்மா இரு கோடி. வள்: எப்படியோ சொத்து சேர்ந்துவிட்டது, சுகமாக வாழ முடியுது. மற்றவர்களைப்போலக் கஷ்டப்பட்டுச் சேர்த்திருந்தா உனக்கும் தெரியும் பணத்தோட அருமை. சீமானுக்கு மகனாப் பிறந்தே — இப்ப, ஆனந்தம் என்கிற அம்சதூளிகா மஞ்சத்திலே புரள முடியுது. உனக்கு ஊர்லே உள்ள கஷ்டம் என்ன தெரியும்?. . . . நான் வந்ததும் விசாரித்துத் தெரிந்துகொண்டேனே. உன் கவலை பூராவும் விதவிதமான களியாட்டங்களைத் தேடுவதிலேதானே. . .

கண்: போடா பொல்லாத போதகாசிரியனாகிவிட்டே! டே! வள்ளி! வா ஒரு நாளைக்கு வீட்டுக்கு. . .

கோ: கண்ணாயிரத்தோட அப்பா இல்லாதபோது. . .

கண்: ஒரு நாளைக்கு என்ன! வாயேன் இப்பத்தான். . .

வள்: வீட்டுக்குத்தானே. . . .

கண்: பின்னே காட்டுக்கா கூப்பிடுவேன். . . .

கோ: என்ன, பிளான் மாறுது. நாம போட்டிருக்கிற திட்டம். . . . .

(ஏதோ ஜாடை காட்டுகிறான்)

கண்: ஆமா. . . . மறந்தே போயிட்டேனே. . . . . பிரதர்! நாளைக்குக் கட்டாயம் வரணும். . . . இப்ப ஒரு அவசரமான வேலை.

வள்: போய் வா கண்ணாயிரம். நீ இவ்வளவு அன்பாகப் பேசினயே, அதுபோதும் எனக்கு. மற்றதுகள் கொஞ்சம் பணம் கைக்கு ஏறியதும், மண்டைகனம் கொண்டுவிடும், நீ நல்லவன். . .

கண்: நாளைக்குக் கட்டாயமா வர வேண்டும். . .

(கண்ணாயிரமும் கோடீஸ்வரனும் கிளம்புகிறார்கள்.)

(திடுமென்று அங்கு வந்த கண்ணாயிரமும், வள்ளியப்பனும் அளவளாவுவதைப் பார்த்துக்கொண் டிருந்த காதரும் வேறோர் நண்பனும் அவர்கள் போவதைப் பார்த்தபடி நின்றார்கள்.)

நண்பன்: மனுஷ ஜென்மமெடுத்தா இப்படி எடுக்க வேண்டும்; நாம் இருக்கறோம் நாய்படாத பாடுபட்டுக்கொண்டு, அதோ பார் கண்ணாயிரத்தை; மகராஜன், புண்யசாலி; போன ஜென்மத்திலே என்ன பூஜை செய்தானோ, இந்த ஜென்மத்திலே இவ்வளவு அந்தஸ்த்தோடு வாழறான். . . கடவுள் கடாட்சம் மோட்டாரைப் பார்! படகு போல!!

காதர்: கிடக்கிறான். தள்ளப்பா. எதுக்காக அவனைப் புகழணும்? மோட்டாரிலே சவாரி செய்கிறானாம். அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத் தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை — சம்பாதிக்க முடியாது — வழி கிடையாது. என்னமோ பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்துவிட்டான், அகப்பட்டதை வைத்துக்கொண்டு ஆடறான் ஆட்டம். இது ஒரு பெரிய கீர்த்தியா? இவன் தன்னுடைய திறமை யாலும், உழைப்பாலும் சேர்த்ததா இந்தச் சொத்து, இவனைப் புகழ. அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூ- வேலைகூடச் செய்ய முடியாதே. உடலிலே அதுக்கு வலிவு ஏது? என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ. பிழைக்க வகை இல்லாதவன். அப்பன் சேர்த்து வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன்.

(சிகரெட் எடுத்து பற்ற வைக்கிறான். அதை நண்பன் பார்த்துவிட்டு.)

நண்: அமர்க்களமாகப் பேசிவிட்டு, “அக்பர்ஷா’ பத்த வைக்கறே நீ. அவனைப் பார்! தங்கமுலாம் போட்ட குழாயிலே 555! காதர்: அது மட்டுந்தானா! பூப்போட்ட கிளாசிலே பொங்கி வழியப்போகுது போதை. நண்: அந்தப் பழக்கம்கூட உண்டா? காதர்: பணம் வேறே எதற்கு இருக்குது?. . . காலத்தைச் செலவிடணுமே! வேறே வழி, நேரே அதுக்குத்தான் ஆசாமி போறது. . .

நண்: பணக்காரன். ஒஸ்திச் சரக்குச் சாப்பிடுவான். . . காதர்: அடச் சே, போ! சுத்தப் பஞ்சப் பயலா இருக்கறே. . .

(காதர் கோபமாக அவ்விடம் விட்டுச் செல்கிறான்)

தம்பி! இப்படிப்பட்ட சீமான் மகன் கொண்டாடும் விழா அல்ல பொங்கற் புதுநாள். சமூகத்தின் கோணல்களை நிமிர்த்தியாக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட உன்போன்றாருக்கென்றே அமைந்துள்ள விழாவாகும்.

கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம்.

காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உனக்குக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன்,

உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன், நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கான உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன்.

ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு. ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6,000 விண் கற்கள் விழுகின்றன; பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது; 100 பேர் இறந்துபடுகின்றனர்; 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக.

காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ, தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவுபடுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவது போல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை.

என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி, நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்துகொண்டு வருகின்றேன்.

தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா?. . . . எழுதுவதாலே! — என்று என் பேரன் மலர்வண்ணன் — என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் — கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது — ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது.

மகிழ்ந்திரு!

விழா நடத்திடு!

வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன்.

அண்ணன்,

12–1–69

மூலக்கட்டுரை

http://www.annavinpadaippugal.info/kadithangal/thamizhar_thirunaal_1.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response