கலைவாணர் சிலைத் திறப்பு

(14.01.1969 அன்று சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் சிலையினைத் திறந்து வைத்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை.)
(இது அண்ணா அவர்கள் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி)

SG
2 min readNov 29, 2020

தலைவர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, மறைந்த நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு இந்தத் தமிழர் திருநாள் அன்று சிலை திறப்புவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். இது சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே நடைபெற்றிருக்கவேண்டும் என்று பலர் கருதினாலும் நம்முடைய நண்பர் வாசன் அவர்கள் சொன்னபடி ‘அதற்கெல்லாம் ஒரு வேளை வரவேண்டும்’ என்பதை அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்த வேளை வரவேண்டும் என்று அவர்கள் சொன்னது வெறும் வைதீகத்திலே சொன்னார்கள் என்று கருதவில்லை. அவருடைய நண்பர்களான நாங்களெல்லாம் அரசை ஆளுகின்ற வேளை வரவேண்டும் என்றுதான் அதற்கு உண்மையான பொருளிருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு, இன்றையதினம் அரசு நடத்துகின்ற திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களிடத்திலேயும், புரட்சி நடிகர் சொன்னபடி எல்லாக் கட்சிகளில் உள்ள நல்லவர்களிடத்திலேயும் நெருங்கிய நட்பும் தொடர்பும் உண்டு. முதன் முதல் ஒரு கலைஞர், எல்லா அரசியல் கட்சிகளாலும் மதிக்கப்படத்தக்க நிலையை பெற்றது என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காலத்திலே என்பதை நாம் அறிகின்ற நேரத்தில், நான் அவருடைய சிறப்பியல்புகளை எண்ணி எண்ணி பெருமகிழ்ச்சி அடைய நியாயம் இருக்கிறது. வெறும் கலைஞராக இருந்து தங்களுடையக் கலைத்தொண்டை ஆற்றியவர்கள், கலையுலகத்துக்கு மட்டும் தொண்டாற்றுகிறார்கள். வெறும் கலைஞராக இருந்து தங்களுடைய சொந்த வருவாயைப் பெருக்கிக்கொள்பவர்கள், தங்களுடைய குடும்பத்தையும் நண்பர்களையும் நல்ல முறையிலே வைக்கின்றார்கள். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கலையுலகத்திற்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தன்னுடைய தொண்டுகளைச் செய்யவேண்டும்; அதற்கு இந்தக் கலை ஒரு வழிகாட்டுதலாக அமையவேண்டும் என்ற முறையில் அவர்கள் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இன்றையதினம் பொங்கல் நன்னாள். உழைப்பினுடைய உறுபயனை சமூகம் முழுவதும் பெறவேண்டும் என்ற நல்ல லட்சியத்தை உலகுக்கு அறிவிக்கின்ற நாள். என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வெற்றி உழைப்பினுடைய அடிப்படையிலே ஏற்பட்ட வெற்றியாகும். அவர் அதைப்பற்றி அவருடைய நெருங்கிய நண்பர்களிடத்தில் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். அவருடைய சிறந்த உழைப்பு அவருக்கு மட்டுமல்லாமல் கலைத்துறைக்கு-நகைச்சுவைப் பாத்திரத்திற்கு ஒரு தனியிடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றது. அதற்கு முன்னால் வரையில் நகைச்சுவைப் பாத்திரம் என்றால் ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும் - அது நகைச்சுவைப் பாத்திரம். நடக்கின்றபொழுது இடறி கீழே விழுவார்கள் - அது நகைச்சுவைப் பாத்திரம். இப்படி இருந்ததை மாற்றி நகைச்சுவைப் பாத்திரம் என்பது சிந்தித்துப் பார்த்து சிரித்து நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரமாக மாற்றியமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். அவருடைய சிலைத் திறப்பு விழா நடக்கின்ற இந்த நேரத்தில் அவருடன் நெருங்கிப் பழகிய என்போன்றோர்களுக்கு, ஆயிரத்தெட்டு எண்ணங்கள் நெஞ்சத்திலே அலைமோதத்தான் செய்யும். அவைகளையெல்லாம் எடுத்து விளக்கிக்கொண்டிருப்பதற்கு நேரமும் இல்லை, என்னுடைய உடல் நிலை அதற்குத் தகுந்ததாகவும் இல்லை. ஆனால் நெஞ்சத்திலே எண்ணி எண்ணி இன்றல்ல என்றென்றும் நான் மட்டுமல்ல - நாட்டுமக்கள் அனைவரும் போற்றிப் பாராட்டத்தக்க தலைசிறந்த தமிழ்மகனாக வாழ்ந்தவர் நம்முடைய என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.

அவருடைய சிலையினை உலகத் தமிழர் மாநாட்டின் ஊர்வலக் குழுவினர் அதை அமைத்துக் கொடுத்திருப்பது மற்றொரு பொருத்தமானதாகும். அவர்கள் உலகத் தமிழர் மாநாட்டிற்கு ஒரு ஊர்வலத்தின் மூலம் சிறந்த மதிப்பினைத் தேடிக்கொடுத்தார்கள். அதைப்போலவே அவர்கள் ஏற்றுக்கொண்ட இந்த சிலையமைக்கும் காரியத்தின் மூலம் அவர்கள் கலைத்துறைக்கு நிரந்தரமான ஒரு தொண்டினை நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றார்கள். அந்தக் குழுவினருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்து, இன்றுபோல் என்றென்றும் கலையுலகத்திலே உள்ளவர்கள், கலையுலகத்தாலே பயன்பெற்றவர்கள், சீர்திருத்த உலகத்திலே உள்ளவர்கள், சமூகத்தின் தொண்டர்கள் அனைவரும் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் போற்றுவார்கள் என்பதில் எனக்கு ஒரு துளி ஐயப்பாடும் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துத் தெரிவித்துக்கொண்டு அவருடைய சிலையினை மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் திறந்துவைக்கிறேன் என்று அறிவித்துக்கொள்கிறேன்.

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

--

--

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response