அகமும் புறமும்

SG
13 min readJan 13, 2022

அண்ணாதுரை, காஞ்சி, 14–1–1966

உழவர் நாட்டில் அமெரிக்க உணவுப் பொருள் !
புள்ளிமானுக்கு வேங்கையா தோழன் ?
“ஏர்முனைத் திருநாளுக்கு நம் பாராட்டு !
தனி மனித வாழ்க்கை நிலை நமது ஈடுபாடு புதியதோர் விடுதலைப் போரில் !
“விடுதலை’க் கவிதையே நான் தரும் பொங்கல் பரிசு !

தம்பி,

நள்ளிரவு நேரந்தன்னில், உள அமைதி கெடுத்திடும் நோக்குடனோ என்றெவரும் கேட்கும் வண்ணம், மேகக் கூட்டம், கருத்துப் பெருத்து ஒன்றோடொன்று போரிட்டுக் குருதியினைக் கொட்டுதல்போல மழையைப் பொழிந்திட, கருங்காற்று வீசித் தருக்களைச் சாய்த்து எவரையும் வெளியே தலைகாட்டா திருந்திடச் செய்திட ஓயுமோ இன்றேல் ஊர் அழியும் வரையில் பேய்ந்தே தீருமோ என்று பெரியோர் கவலை கொள, வேண்டும் போது எங்கோ சென்று ஒளிந்து கொண்டு வேண்டா வேளையில் வந்து எமை அலைகழிப்பதனையே ஓர் விளையாட்டு ஆக்கிக் கொண்டதோ விண்ணுலவும் மேகக் கூட்டம் என்று உழவர் உளம் நொந்து பேசிட, பெருமழை! பெருமழை! எதை நீவிர் தடுக்கவல்லீரெனினும், இதனைத் தடுத்திட இயலாது உம்மால்! முடியுமெனில், முயன்று பாரீர்!! என்று மாந்தரை அறைகூவிடும் முரசொலி போன்ற இடியோசையும், வருவாரின் தலைதனைக் கொய்திடும் வாள் காண்பீர் என்றதனை வீசுதல் போல் மின்னல் வெட்டும் மிகுந்திருக்கும் வேளை! வயலுக்கும் வாவிக்கும், ஆற்றுக்கும் கரைக்கும், ஊருக்கும் ஏரிக்கும் வித்தியாசம் இல்லை என்றெண் ணத்தக்க விதமாக எங்கும் வெள்ளக்காடாகிக் கிடந்திடும் நிலைமை! படல் கொண்டு பக்குவமாகப் பாதுகாத்துக் கொண்டதனால் அணையாமல் சிறு விளக்கொன்று ஒளியினைச் சிந்திடும் ஓர் இல்லம். ஆங்கு, முற்றத்தில், அகமும் முகமும் கவலை தோய்ந்திடக் குனிந்த தலையுடன் குமுறிடும் ஆடவன், எதையோ விரட்டிடத் துணைதனைத் தேடி இங்கும் அங்கும் உலவு கின்றான். என்னடா! மகனே! ஏதுக்கித்தனை வேதனை கொள்கிறாய்! எல்லாம் நல்லபடியாய்த்தானே நடந்திடுமப்பா! கலக்கம் விட்டொழி! கவலையை விரட்டு! என்றெல்லாம் கூறிட எண்ணிடும் முதியவர் ஏனோ முயன்று பார்க்கிறார், இயலவேயில்லை! அன்று நானும் இவன் போல்தானே நெஞ்சில் நெருப்புடன் நின்றேன், உழன்றேன்! இன்று நான் எப்படி இவனைப் பார்த்து, ஏனடா மகனே! இத்தனைத் திகிலென எங்ஙனம் உரைத்திடுவேன் எவ்விதம் அவன் கவலை துடைத்திடுவேன், இயலாது என்னால் என்றெண்ணிப் பேச்சுக்காக எனப்பிறந்த ஓசையினைப் பெருமூச்சுத் தானாக்கி இருந்தார் ஓர் பக்கம். உள்ளேயோ, ஓ! அப்பா! அம்மம்மா! உயிர் போனால் போதும் இனித்தாளேன் வேதனையை! ஆயிரம்தேள் என்றன் அடிவயிற்றிலே தங்கி, எல்லாம் ஒன்றாகிக் கொட்டினால் நான் என்செய்வேன்! பல்லைக் கடித்துக் கொள் பருவதம்! என்று பாட்டி சொல்கின்றாள், பல்லுடைப்பேன் என்று கூடப் பதறி நான் கூறிவிட்டேன், பல்போன பருவத்தாள் என்பதனை மறந்து எல்லாம் இருண்டு கிடக்கிறதே! ஊரிலுள்ள நெருப்பெல்லாம் ஒன்றாக என் வயிற்றில் கொண்டு வந்து கொட்டினரோ கொடியோர்! — என்று பல எண்ணி, அத்தனையையும் சேர்த்து அம்மம்மா! அப்பப்பா! அய்யய்யோ! என்ற சொற்களாக்கி, அலறுகிறாள். “அம்மா’ ஆகின்றாள்! “அவன்’ அவளை அவ்வாறாக்கிவிட்டு, அவதிப்படுகின்றான், அனைவ ரையும் பார்க்கின்றான். “அந்த “அவதி’யிலே உருவாகி வளர்ந்ததுவே அவனி முழுதும் என்பது அறிவான் அவன், நம்போல; ஆனால் அறிந்ததத்தனையும் பறந்திடுது “அவள் எழுப்பும் அம்மம்மா ஒலி’ கிளம்பு அவன் செவி வீழ்வதாலே, செச்சே! இது என்ன பிழைப்பு! பெண்ணாகப் பிறந்தாலே இதுதானே “எழுத்து’ எனப் பெற்றவர்கள், பேசுகின்றார்; பிஞ்சுகள் புரியாமல், “கத்தாதிருக்க மருந்திலையோ?’’ என்கின்றார். இந்நிலையில், ஓ! ஓ! என்ற பேரொலி வெளிக்கிளம்பி, மறுகணம் விந்தை அமைதிக்கு இடங்கொடுத்து விரட்டிட, உள்ளே இருந்தோர் “இசை’ மெள்ளக் கிளம்பிடுது; உலவியவன் செவியினிலே ஓராயிரம் பண் ஒரே நொடியில்!! ஆண் பிள்ளை! என்பாரும், எல்லாம், “அவன் போலே!’’ என்று அடையாளம் கூறுவாரும், “தாத்தா வாயினிலே கொட்டுங்கள் கற்கண்டு’’ என்பாரும், “கற்கண்டா! அவருக்கா!!’’ எனக்கேட்டுச் சிரிப்பாரும் நடமாட ஒரே நொடியில், வேதனை சூழ்ந்த இல்லம் மகிழ்வெய்தித் துள்ளி நிற்கிறது! “எனக்குத் தெரியும் அப்போதே, இன்று இரவுக்குள் குழந்தை பிறந்திடும் என்பது’’ எனச் செப்புகிறார் ஒருவர்: “அவன்’ அவரைக் கண்டு சிரிக்கின்றான்! — அடடா! நீ இத்தனை கோழையாகிவிடுவாய் என்று நான் எண்ணிடவேயில்லை! எத்தனை பதறிவிட்டாய்! எதை எண்ணிக் கதறி நின்றாய்! என்று கேட்கின்றார் முதியவர், தந்தை ஆகிவிட்ட தன் தனயன்தனை நோக்கி. “என்னினும் பெரியோர்கள் இருந்த நிலை கண்டே நான் என்ன ஆகிடுமோ என்றஞ்சி இருந்திட் டேன்; எனக்கத் தெரியாதா, மருத்துவரே கூறினாரே!!’’ என்றுரைத்தபடி “அவனும்’ இன்னும் அனுமதியை வழங்கிட லாகாதா! இத்தனைக்கும் காரணமாம் என் “மன்னவனை’ நான் காண!! — என்றெண்ணி உலவுகின்றான். முன்பு உலவியது நெருப்பின் மீது; இப்போதுலாவுவது பூங்காற்றின் மீது! ஏன்? வாழ்வின் பயன் கண்டான்! காதற்கனி பெற்றான்! இன்பப் பெருக்கதுவும் கண்மூக்கு வாய்பெற்று, காலுதைத்துக் கை அசைத்து, “வந்துள்ளேன்! வாழ்வதற்கு! தந்திடுவேன் வாழ்வு உனக்கு’’ என்று கூறுகின்றான், பெற்றோர்க்கன்றி மற்றோர்க்குப் புரியாத பேரின்ப மொழியாலே!

பிள்ளைக் கனியமுதைப் பெற்றிடும் வேளையிலே மற்ற நிலையத்தனையும் மறைந்திடுதல் போல எத்தனையோ இன்னலுக்கு ஆளாகியுள்ள இந்த நம் தமிழகத்தில், விந்தையாம் ஓர் மாற்றம் விரைந்திடுதல் காண்கின்றோம், பொங்கற் புதுநாள் பூத்திடும் நந்நாளன்று!

களத்தினிலே கடும் போரிட்டு, ஆற்றல் மறவரவர் விரட்டினர் மாற்றாரை; எனினும், பகை ஒழிந்தபாடில்லை, புகை நின்று போகவில்லை, எப்போது என்ன விபரீதம் வெடித்திடுமோ என்ற நிலையதுவும் கப்பிக் கொண்டே உளது, காரிருள் போலே! போர் கிளம்பி பொல்லாங்கை விளைவிக்கும் முன்பே, பொன்னாடாய் இந்த நாட்டை ஆக்குதற்கே பொறுப்பேற்றோம் என்று கூறி, எந்நாட்டிலும் இல்லை எமக்கு நிகர் நல்லோர்கள் என்று அறைந்து, இறுமாந்து கிடந்திடுவோர், இல்லாமைதனை விரட்ட இயலாத தன்மையினால், இதனை இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண்விடல் எனும் நெறி மறந்த காரணத்தால்,

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

எனும் குறள், ஏட்டிலே இருந்திட மட்டுமன்று, நாட்டிலே நடைமுறையாகிடவே என்பதனை மனத்திற்கொள்ளாத போக்கதனால், பொன் விளையும் பூமியென்றும் புவிக்கே ஓர் பூங்காவென்றும் பொய்யாமொழிப் புலவர் புகழ்ந்திட்ட திருநாட்டில் “திரு ஓட்டுத்’’ திட்டத்தால் தீர்த்திடுவோம் “போதாமை’ என்று கூறிடுவார் விழிநீர் அடக்கிடும் வழி வகுத்துள்ளார். அவர் படிக்க ஆன்றோர்கள் விட்டுச் சென்ற அருமைமிகு நூற்களிலே உள்ளந்தனைத் தொடும் ஓவியம் காண்கின்றார், நாட்டின் கோலம் நனி சிறந்திருந்ததென உணர்கின்றார். இன்றோ இன்னலும் இழிவும் இடரும் படர்ந்துள்ள பாழ்நிலை காண்கின்றார்; இந்நிலை காண்பதற்கோ மூவாறாண்டாக முடிதரியா மன்னரென இருந்தீர் ஐயா! என்று கேட்டிடினோ, ஆளவந்தார், “அறியாச் சிறுவர்! அன்று இருந்தவர் தம் தொகை என்ன, வகை என்ன? இன்றுள்ள மாந்தர் தொகை பெருகியதை அறியாயோ!’’ என்றுரைத்து, அந்த ஓர் விளக்கத்தில் அவனியின் அறிவத்தனையும் அடக்கித் தந்துள்ளோம் என்றெண்ணிக் களித்துக் கிடக்கின்றார்.

காலம் மாறுவதும், அதற்கேற்பக் கோலம் புதிதாகுவதும், புரியாத புதிரன்று; காலம் மாற்றுவது கோலத்தை மட்டுமன்று, முறை பலவும் மாறிடுதல் காண்கின்றோம்; அம்மாற்றம் அனைவருக்கும் நல்வாழ்வு கிடைத்திடும் ஓர் வழியை எத்தனையோ நாடுகளில் ஏற்றமுடன் தந்திருக்க, இந்த நாட்டினிலே மட்டும் ஏன் இந்த நிலை? என்பதே கேள்வி — இதற்கு யாது பதில்? குற்றம் கூறாதீர்! குறை கிளறிக்காட்டாதீர்! கொற்றம் நடத்திடுவோர் அறிந்துள்ளார் அவ்வளவும்! மெள்ள மெள்ளத்தான் மலர்ந்திடும் நலவாழ்வு என்கின்றார். இந்த ஒரு பதிலை, ஐயன்மீர்! எத்தனை முறை நீர் கூறிடுவீர்! ஏழை நாங்கள் எத்தனை முறை இதனை ஏற்றிடுவோம்; என்று கூறுகின்றார் சில பேர்கள்; மற்றையோர் அச்சம் கொண்டு குமுறுகின்றார், நலிவாலே.

உண்ண உணவின்றி ஒரு ஆளும் சாகவிடேன்! உறுதி! உறுதி இது! என்று உரைக்கின்றார் — நமை ஆளும் நல்லோர் அல்ல; எங்கோ நெடுந்தொலைவில் இருக்கும் அமெரிக்க அதிபர்! இந்தத் திருநாடு உழவர் தம் பெருநாடு!! இங்கு அனுப்புகிறார் விந்தைத் தொழில் புரியும் நாட்டினராம் அமெரிக்கர், உணவுப் பொருள் குவியல்!!

காருலாவ, ஏருலாவ, சீருலாவும் நாடு இது என்கின்றார் கவிஞர் இங்கு; இந்நாட்டில் போதும் என்று கூறத்தக்க அளவு விளைவு இல்லை என்கின்றார். ஏனெனிலோ, மெத்த ஆராய்ந்து கண்டறிந்து விட்டோம்! விளைவு மிகுந்திடாத காரணம் விளங்கியது, விளைவு மிகுந்திட வழி கண்டு கொண்டோம் யாம்! என்னை என்பீரேல், கூறிடுவோம், கேட்டிடுவீர், வயலில் வளம் காண உரம் இடுவீர் வகையாக! உரமிடுதல் வயலுக்கு வலிவிடுதல்! வலிவு பெறும் வயல், வழங்கிடும் செந்நெற் குவியல்! என்று உரைக்கின்றார் உணவமைச்சர். இத்தனை நாள் ஈதறியாது இடர்ப்பட்டு வந்தோமே! உரமிடுதல் வேண்டுமாம் வயலுக்கு!8 உரைக்கின்றார் அமைச்சர் என நாடே வாழ்த்திடும் என்று எண்ணுவரோ அமைச்சர்! இருக்கும்! அந்த நம்பிக்கை மிகுதியுடன் பேசுகிறார்; தெரிகிறது இதற்கு இவரை வாழ்த்திட வேண்டுமெனின் வள்ளுவரை அடியோடு நாம் மறந்திட இசைதல் வேண்டும்! அப்போதுதான் இவர் கூறிடும் முறை “கண்டு பிடிப்பு’ எனும் நிலை பெற்றிட இயலும் வள்ளுவரோ, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே இயம்பியுள்ளார்:

ஏரினும் நன்றால் எரு இடுதல், கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு

என்பதாக! இதனையே இவர் கூறுகின்றார் இன்று எனில், எவர் இதனைப் புத்தறிவு என்றோ புதுமை முறை என்றோ கொள்ள இயலும்? ஒரு குறள் தன்னைப் பெறுகிறோம் பெருநிதி கொடுத்து என்றன்றோ எண்ணத் தோன்றும்!

உழவு நிலை இஃதெனில், தொழில் நிலையோ, ஒரு சிலரின் ஆதிக்கத்தில் சிக்கி “ஓடப்பர்’ மிகுந்துள்ள கேடு மிகு நாடாக்கி விட்டதின்று.

சட்டம் எதுவெனினும் சாய்த்துவிடும் வல்லமை மிகப் பெற்றோர், சாயாத போக்கினரும் சாய்ந்திடும் விதமான சல்லாபப் பொருள் தந்து அவரைத் தம் “சரக்காக்கிக்’ கொள்வோர்கள், மூதறிஞர் பற்பலரும் மூக்கின் மேல் விரல் வைத்து அடடாவோ! இப்படியோ!! என வியக்கும் விதமாக, பொதுப் பணத்தைத் தமதாக்கிக் கொண்டிடும் முந்த்ராக்கள், ஆழ்கடலைத் தாண்டியும் எமது அரசு உண்டு அறிந்திடுக! அரச நடத்திடுவோர் எமது ஆதாயம் தன்னைத் தடுத்திடவோ இயலாது, அவர் அரசின் அடிப்படைக்கே பொற்கட்டி தந்துள்ளோம் எனப் புகலும் டாட்டாக்கள், பிர்லாக்கள், டால்மியாக்கள்; பஞ்சையாய்ப் பாமரரை ஆக்கிவிட்டுப் பருத்தி ஆலையிலே பெரும் பொருள் ஈட்டிடுவோர், குடைந்தெடுத்து வந்திடுவீர், குவலயம் தழைத்திடவே என்றுரைத்து எளியோரை அமர்த்தி, அவர் குவிக்கும் இரும்பாலும் கரியாலும் பொற்கோட்டை கட்டிடுவோர், பொருளாதாரக் கயிற்றில் அரசைப் பிணைத்திடுவோர், பொல்லாத போக்கினராம் முதலாளிகட்கே எல்லாம் என்றாகிவிட்ட இழி நிலையைக் காண்கின்றோம். சோஷியலிசம் பேசுங்கள், சுவை உண்டு, சூடுண்டு; ஆயினும், தனியார் துறை உண்டு மறவாதீர்! என்றுரைத்து, பன்னாள் பாடுபட்டுப் பல பெரியோர் வகுத்தளித்த பாகுபாடு அகற்றும் முறையாம் சமதர்மமதைக் குலைத்திட்ட வன்கணாளர், கொலு வீற்றிருக்கும் நம் குடியாட்சிக் கோமான்கள் தமக்குக் கொஞ்சும் பொருளானார்கள்! உழைக்கின்றான்; உருக்குலைந்து உழல்கின்றான், ஓராயிரம் நோய்க்கிருமி உடலை அரிக்கிறது; உற்பத்தி பெருக்கிடுக! உற்பத்தி பெருக்கிடுக! என்று ஊராள்வோர் உரைக்கின்றார்; உற்பத்தி பெருகுவதும் உழைப்பாளி நொறுங்குவதும் காண்கின்றோம், இந்நிலையில் உள்ளதந்தோ தொழிலுலகம்!

விந்தைத் திட்டம் இதோ, விரட்டிடுவோம் வறுமைதனை, ஐந்து ஆண்டினிலே அமைத்திடுவோம் நல்வாழ்வு என்று அறிவித்து ஆளவந்தார், மூன்று திட்டங்கள் முடித்துவிட்டார்! மக்கள் முதுகெலும்பை நொறுக்கி விட்டார்! திட்டங்கள் நடாத்திப் பின் திரும்பிப் பார்க்கின்றார், தேனாறு எங்கே! பாலாறுதானெங்கே!! என்று கேட்கின்றார்!! ஓடுவதோ உழைப்பாளி உகுத்திட்ட கண்ணீரும் செந்நீரும்! காணுகின்றார்! கண்டு பின்னர்க் கூறுகின்றார், பெருகிய செல்வமது சென்ற இடம் தெரியவில்லை! ஏழைக்கு அச்செல்வம் வாராத காரணமும் எள்ளளவும் புரியவில்லை! எங்கோ ஓர் “மர்மம்’ இருக்கிறது, கண்டறிவோம்; எம்மிடம் அவ்வேலைதனை விட்டுவிட்டு, நாட்டினரே! உழைத்திடுவீர்! இந்நாடு பொன்னாடு ஆகிடும் உம் திறத்தாலே!! என்று ஊக்கவிக்கும் பேச்சினை ஊற்றித் தருகின்றார்.

மூன்றடுக்குக்காரன் அவன் எட்டடுக்கு ஏறிவிட்டான்! மூட்டை சுமப்பவனோ, குப்பை அள்ளுகின்றான்; செல்வச் சுமைதாங்கி செருக்குடன் உலவுகிறான், சிவனே உன் பாதம் சேர்த்துக்கொள்! எனை என்று செபிக்கின்றான் உழைப்பாளி. மாளிகையின் மணம் பரவி மயக்கமளிக்கிறது. பாட்டாளி விடுதியிலே வறுமை பாம்பாய்ப் படமெடுக்கிறது, இந்நிலையில் சமுதாயம் இருந்திடின் என்னாகும் என்பதனை எத்தனையோ வித்தகர்கள் எடுத்துரைத்துச் சென்றுள்ளார். அத்தனைக்கும் மாற்று மருந்துண்டு, பெற்றிடப் பொருள் உண்டு என்று இறுமாந்து கிடக்கின்றார் செல்வரானோர். எமக்கு அவர்! அவர்க்கு யாம்! என்றே உள்ள ஓர் எழுதாத ஒப்பந்தம் இயக்கி வருகிறது ஆட்சி முறைதன்னை. இந்நிலையில், இல்லாமை போவதெங்கே! இடுப்பொடிந்ததும் இருமிக் கிடப்பதும், ஓட்டைச் சட்டியும் ஓலமிடுவதும் குப்பைப் கூளமும் எலும்புருவங்களும், இதோ! ஐந்தாண்டுத் திட்டம் பெற்றெடுத்த அழகரசர் யாம்! என்று அறிவிக்கக் காண்கின்றோம்.

தைத் திங்கள் வருகின்ற பொங்கல் நாளில்
தங்கத்தைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கும்
நெய்ப்பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சிகொள்வர்
நிதிபடைத்த சீமான்கள்; என்றும் எங்கள்
கைதொட்டு வாய்பட்டதுண்டோ பொங்கல்?
கண்மட்டும் ஓயாமல் பொங்கும்! பொங்கும்!
தெய்வங்கள் திருநாட்கள் எங்கட் கில்லை:
தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?

வெட்கமாகக்கூட இருக்கிறது, வேதனை சூழ்நிலையினிலே விழாக் கொண்டாடுக என்று கூறுகிறோமே என்று கவிஞர் இராஜேந்திரன் கவிதையைப் படித்திடும்போது.

ஆயினும், தமிழர்தம் விழாவாம் பொங்கற் புதுநாள் விழாவினைக் கொண்டாடுதல் முறையே என்று கூறிட முற்படல் ஏனோவென்றால், இவ்விழா உண்டு உருசி கண்டு மயங்கிக் கிடந்திடவுமல்ல: பழய கணக்கினைத் துடைத்திடு, படையலிட்டேன்! பரமனே! புதுக் கணக்குப் போட்டிட முனைகின்றேன் நான்! என வேண்டிடும் வகைக்கும் அன்று; சமுதாய நிலைதன்னை உணர்ந்திடவும் திருத்திடவும் உழைப்போர்க்கே இவ்வுலகம் எனும் உயர்நெறி வெற்றிபெற நாம் நம்மாலான அளவு பாடுபடுதல் வேண்டும் என்ற உறுதி பெறவும், நல்லெண்ணம் உள்ளமதில் பொங்கிடுதல் வேண்டும் என்பதற்கே இது விழா மட்டுமன்று விழி திறந்திட ஓர் அழைப்பு என்று கொண்டிட வேண்டும். அக்காரணம் பற்றியே நமது கழகத்தினரும் நற்றமிழை நாடு வாழத்தந்திடும் புலவர் பெருமக்களும், இவ்விழாவினை தமிழ், தமிழகம், தமிழ் நெறி என்பன பற்றிய விளக்கம் அளித்திடும் விரிவுரையாற்றுதற்கும், பண்பு மிகுந்திடும் முறை பற்றிய விளக்க உரை தந்திடுவதற்கும் வாய்ப்பாக்கிக் கொள்கின்றனர். கண்ணுக்கு விருந்து இல்லம் தந்திட, கருத்துக்கு விருந்து கற்றோர் அளித்திட இவ்விழா பாற்பொங்கலாக மட்டுமன்றித் தூய எண்ணப் பொங்கலாகவும் இருந்திடக் காண்கின்றோம். இந்த நற்பயன் பெறவே இந்நாளை விழா நாள் என்கின்றோம். மெய்யான விழாவோ, எல்லார்க்கும் எல்லாம் இனிது உளது என்ற நெறி வெற்றியுடன் அரசோச்சும் நன்னாளே; இன்றல்ல!

இந்நாள், இஞ்சியும் மஞ்சளும், கதலியும் கரும்பும், செந்நெலும் பிறவும் கொஞ்சுமொழி பேசிடும் கோலம்தனைத் தந்திடும் திருநாள்; உழைப்பால் கண்டிடும் “விளைவு’தனைக் கண்டிடச் செய்திடும் உன்னதமிகுநாள்! விதைத்தவர் அறுப்பர்! எனுமொழி தன்னில் தொக்கியுள்ளதத்தனையும் அறிந்து கொள்ளும் நல்வாய்ப்பு அளித்திடும் ஓர் அறுவடைத் திருநாள். இங்கு நாம் வாழப்பிறந்தோம், வாழ்வின் வகை நமது உழைப்பின் வகையையும், உழைப்பின் விளைவைப் பயன்படுத்தும் முறையையும், அம்முறையினைச் சீராக வகுத்திடும் அரசின் திறத்தையும், அந்தத் திறத்தினைப் பெற்றுள்ளோரையே அரசோச்சிடச் செய்திடும் உரிமை பெற்ற மக்களின் அறிவாற்றலையும் பொறுத்துளது.

துள்ளிடும் புள்ளிமான்களுக்குத் தோழன் வேங்கை என்று கண்டிடின், காடும் கெடும்! நாட்டினிலேயே இது போன்ற முறை ஒன்று நீடிக்கவிட்டிடின் என்னாகும்? இப்போதுள்ள நிலையே என்னாகும் என்பதற்குப் பதில், வேறு எதற்கு!

எனவே, தம்பி! வாழ்வின் விளக்கம் பெற்றிடவும், வாழ்வினைச் செம்மையாக்கிடத்தக்க முறைபற்றி அறிந்திடவும், அந்த முறைக்கேற்ற அரசு அமைத்திடவும், உறுதி தேடிப் பெற்றிடவும் இந்நாள் பயன்படுதல் வேண்டும்.

இவ்வாண்டு அரசாள்வோரே, பொங்கற் புதுநாளை ஏர்முனைத் திருநாள் என்று கொண்டாட முன்வந்துள்ளனர்! இது மெத்தவும் பாராட்டி வரவேற்கத்தக்க மாற்றம். ஏர் முனையின் வெற்றியே போர்முனை வெற்றிக்கும் அடிப்படை! ஒரு நாட்டு வாழ்க்கையின் அச்சாணியே உழவு; அதிலும் விரிந்து பரந்துள்ள இந்நாட்டில் இன்றும் நூற்றுக்கு எண்பதின்மர் என்ற அளவுள்ள மக்கள் உழவுத் தொழி-லேயே ஈடுபட்டவர்கள்; இன்று நேற்றல்ல, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக!

நிலத்திடை
நீரிடை
கானிடை
மலையிடை

என்று எங்கெங்கு விளைவுபெற முடியுமோ அத்தனையும் பெற்று வாழ்ந்தவர் முன்னோர். அவர்கள் நேர்த்தி மிகு உழவு முறை வகுத்து நடாத்தி வந்த அந்த நாட்களில், இன்றைய நாகரிக நாடுகள் பல, காடும் மேடும் கொண்டதாக, கண்டதைத் தின்றிடும் விலங்குப் போக்கினரின் உறைவிடமாக இருந்து வந்திருக்கின்றன இன்று இத்திருநாடு, அமெரிக்க உணவு பெற “ஆள்’ அனுப்பும் நிலைக்கு முன்னேறி விட்டிருக்கிறது. பெற்றோம் பெருவெற்றி! என்கிறார்கள் அரசாள்வோர், ஐயமிட்டிட அயலவர் ஒப்புக் கொண்டது கேட்டு, உளம் பூரித்து!

இந்நாடு தன்னிறைவு பெறவும், இந்நாட்டில் கிடைப்பது இந்நாட்டவரிடையே வஞ்சனையின்றிப் பகிர்ந்தளிக்கப் படவுமான முறை கண்டிட வேண்டும். அதிலே நாம் பெறும் வெற்றியைப் பொறுத்தே எதிர்காலம் வடிவமெடுத்திடும்.

மணமற்ற மலர், சுவையற்ற கனி, வெந்திட மறுத்திடும் காய்கறி, இவைகளைக் கொண்டு விழா கொண்டாடிட முடியுமோ? அஃதே போலத்தான், வாழ்வு விழாவாக அமைய வேண்டிடின், பொருள்கள் பயன் தருவனவாக இருந்திடல் வேண்டும், பெற்றிடும் பயன் அனைவர்க்கும் என்ற நெறி நிலைத்திட வேண்டும்.

பொங்கற் புதுநாள், புத்தாடை அணிந்த பூவையின் புன்னகையைப் பெற்றுக் களித்திட மட்டுமன்று; இன்று போல் இன்பம் என்றும் இருந்திடவும், நமக்குக் கிடைத்ததுபோல் இன்பம் எல்லோருக்கும் கிடைத்திடவும் வழி யாது, அதற்கு நாம் எங்ஙனம் பாடுபட வேண்டும் என்பது பற்றி எண்ணிப் பார்த்திடவும், உறுதி பூண்டிடவும் பயன்படுதல் வேண்டும்.

கண்ணே! கனியமுதே! கற்கண்டே! செந்தேனே! என்று கொஞ்சினால் மட்டும் போதுமா, குழந்தை மகிழ்ச்சி ஒன்றினாலேயே குமரனாகிட முடியுமா? இயலாதல்லவா? அதுபோலவே, இந்நாடு எந்நாடு! பொன்னாடு. புலவர் போற்றிய திருநாடு, வீரம் பொங்கிடும் ஆற்றல் மறவர் நாடு. என்றெல்லாம் புகழ்பாடுவதால் மட்டும் நாட்டினை நன்னிலைக்குக் கொண்டு வந்துவிட முடியுமா? நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வந்திடும் பொறுப்பினை நாம்ஏற்றுக் கொண்டாக வேண்டும். புதிதாக நாம் எதனையும் ஆக்கக் கூடத் தேவையில்லை; நாட்டிலே உள்ளது என்ன என்று கண்டறிந்து பெற்றாலே போதும்.

எரிமலையும் பாலை நிலமும், சதுப்பும் நிலநடுக்கமும், கடற் கொந்தளிப்பும் பிறவுமான இயற்கையின் கோபம் இந்நாட்டின் மீது அதிக அளவு வீசப்படவில்லை. மாறாக இயற்கை இங்கு பசுமையையும் வளத்தையும் பாங்குடன் அளித்திருக்கக் காண்கின்றோம். வாழ்ந்தே அறியாத மக்களாகவும் இந்நாட்டவர் இல்லை; “மகஞ்சதாரோ, அரப்பா’ எனும் நிலைகளை நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே பெற்றிருந்த சீர்மிகு வாழ்க்கை நடாத்திய மக்கள் என்று வரலாறு காட்டுகின்றது. இந்நிலையில், இங்குச் சிலர் நச்சுக் காற்றினைப் பரவவிடும் போக்கினை மட்டும் நீக்கிடும் ஆற்றல் நமக்கு இருந்திடின், எக்குறையும் இங்கு இல்லை என்று உலகினை நோக்கித் தலை நிமிர்ந்து கூறிட இயலும். இன்று நிலைமை அதுவோ? இல்லையே! வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி!

பொங்கற் புதுநாள்! அதோ உன் அங்கயற்கண்ணி அழகுக்கு அழகளிக்கும் புத்தாடை பூண்டு நடக்கின்றாள், உன் இதய மேடையில்! உன் செல்வங்கள் பழத்தைக் குழைத்துக் கொண்டிருக்கக் கண்டு, அடிக்கிறேன் பார்! என்று மிரட்டியபடி அருகே சென்றிடும் அணிமயில், அடிக்கின்றாளா, பார்! இல்லையே! அணைத்துக் கொள்கின்றாள்! முத்தம் அளிக்கின்றாள்! ஏன்? அந்தச் சுட்டிப் பயல், பழம் குழைத்த விரலைத் தாயின் உதட்டருகே கொண்டு சென்று, அம்மா! அம்மா!! என்று கொஞ்சிவிட்டான்; அவ்வளவுதான்! ஒரு பழமா, உள்ள பழம் அத்தனையும், கையால், காலால் அவன் குழைத்துப் போட்டால்கூட அந்தக் காரிகையின் கண்களுக்கு விருந்தாகத் தான் தோன்றும். காணுகின்றாய், கண்கள் களிநடம் புரிந்திடுகின்றன. ஆனால், இந்தப் புத்தெழில் இல்லத்தரசி பெற்றிடக் கடன்பட்டிருப்பாயேல். அந்தக் கண்கள் கவலைக் குறிகளாக அல்லவா மாறிவிடும்!

“ராஜாபோல இல்லே! இந்தப் பட்டுச்சட்டை?’’ என்று கேட்கிறாள், உன்னை வென்றாள். ஆம்! என்கிறாய் இழுத்தாற் போல, பட்ட கடனை நினைவுபடுத்திக் கொண்டு; அவள் புரிந்து கொள்கிறாள்; பூத்த மலர் வாடுகிறதே! கண்டனையா?

அந்தக் குடும்பத்தை விட்டுவிடு, பொங்கற் புதுநாள் இன்னின்னது வேண்டும் என்று கேட்டு, ஆகட்டும் என்று தலை அசைத்து, கடைசியில் இல்லை என்று கைவிரித்து விட்ட நிலையில் எத்தனை எத்தனை குடும்பங்கள்! ஆங்கு விழாவின் காரணமாக மகிழ்ச்சியா பிறந்திடும்? விம்மல்; குமுறல், வேதனை.

விழா முழுச்சுவை தந்திடுவதாக இருந்திட வேண்டுமெனில், அது எல்லோர்க்கும் விழாவாக இருத்தல் வேண்டும். அந்த நிலை கண்டிட உழைப்பதிலேயே ஓர் தனி மகிழ்ச்சி பெற்றிடலாம்.

எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் வாழப் பிறந்தவர் களே என்று கவிதை மேற்கோள்கள் காட்டி எத்தனை நாளைக்கு நமக்கு நாமே மயக்கமூட்டிக் கொள்வது?

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ!
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னமோ?
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ?

பொருட்சுவை மிகுந்திருக்கிறது ஏடளிக்கும் இப்பாடல்! குரல் இனிமையும் இசை அறிவும் பெற்றவரிடம் சிக்கிக் கொண்டால் போதும், இப்பாடலைக் கொண்டு “ஒரு மணி நேரச் சொற்சிலம்பம்’ நடத்திடுவார்; அவர் நாவிலே சரஸ்வதி தாண்டவமாடுவதாகப் பாராட்டப் பெறுவார். ஆனால், தம்பி! இல்லாமை எனும் கேடு பீடித்துக் கொள்வாரை, மாரி மாய்த்து விடுகிறது, காற்று பிய்த்தெறிகிறது, கதிரவன் சுட்டுப் பொசுக்குகிறான். மாநிலம் மட்டும் சுமக்க மறுப்பதில்லை, ஏனெனில் வறியவன் உடல் தேய்ந்து தேய்ந்து வெறும் எலும்புக் கூடாகிப் போய்விடுவதால்! அவன் இருப்பது மாநிலத்துக்குத் தெரிவதுகூட இல்லை!

அறிநெறிதனை எடுத்தியம்பிடின், நல்லொழுக்கந்தனை உணரச் செய்திடின், மக்களை நன்மக்களாக்கிடின், சமூகத்தில் உள்ள கேடுகள் மாய்ந்தொழிந்து போகும் என்கின்றனர். அதுபோல் அறநெறி கூறிடல் கூடாது என்று கூறுவேன் என்ற எண்ணத் தேவையில்லை, தம்பி! ஆனால், அவையாவும், எரியும் கொப்பரை மீது தெளிக்கப்படும் பன்னீர்த் துளிகளெனப் பொரிந்து போகின்றன.

செய்ந்நன்றி கொல்லன்மின்;
தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி புகலன்மின்;
பொருள்மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம்
அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம்
பிழைத்துப் பெயர்மின்!

என்று சிலம்பு ஒலித்திருக்கிறது! புதிதாக நன்னெறி பற்றி நாம் ஆராய்ந்தறிந்து கூறிடத் தேவையில்லை. சிலப்பதிகாரத் திலேயே “பொய்க்கரி’யால் விளைந்த பொல்லாங்கு விளக்கப் பட்டுமிருக்கிறது. எனினும், சிலப்பதிகார காலத்து இளங்கோ அடிகள் கால முதற்கொண்டு இன்றளவும் செய்யப்பட்டுவரும் நன்னெறி, சமூகத்தின் போக்கை மாற்றி அமைத்திடக் காணோமே, என் செய்வது?

“தனி மனித வாழ்க்கை’ என்பதே, தம்பி! இப்போது மிகமிக அரிதாகிக் கொண்டு வருகிறது சுற்றுச் சார்பின் வேகமும் நெருக்கமும், “தனி மனித வாழ்க்கை’யை இயலாததாக்கி விட்டிருக்கிறது.

கேடுசூழ் இவ்வுலகில் நடமாடிடின் கெட்டுப் போவேன் என்று கருதிக் கிரேக்க ஞானி ஒருவர், பீப்பாய்க்குள் ஒளிந்து கொண்டார் என்று கதை கூறுவார்கள்.

இன்று எந்தத் தனி மனிதரும் சமூகத்தைக் கப்பிக் கொண்டுள்ள சூழ்நிலையினின்றும் தம்மை வேறுபடுத்திக் கொள்ள முடிவுதில்லை. நோய் தாக்காதிருக்கத் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுபோல, சூழ்நிலை தம்மைத் தாக்கிடாதபடி சில தடுப்பு முறைகளை வேண்டுமானால் தேடிப் பெற்றிடலாமேயன்றி, பண்டை நாட்களைப் பெற்றிடுதல் தங்கு தடையற்ற தனிமனித வாழ்க்கையைப் போல இதுபோது இயலாது.

மக்கட் தொகை பெருக்கம் மட்டுமல்ல, மக்களுக்குள் ஏற்பட்டுவிட்டுள்ள தொடர்புகள், அவர்கள் ஈடுபடும் அலுவல்கள், அந்த அலுவல்களின்போது கிளம்பிடும் வேகம், புதியதோர் பிரச்சினையாகி விட்டிருக்கிறது.

பண்டை நாட்களைக் காட்டிலும் அதிக அளவிலும் வேகத்திலும் தனி மனிதன், சமுதாயத்திலே ஈடுபட வேண்டியிருக்கிறது.

தம்பி! வேடிக்கையாகவே இருக்கும், நான் கூறுவதனை ஆராய்ந்து பார்த்திடின், ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நகர்களில், இத்தனை மக்கள் “நடமாட்டம்’ கண்டதில்லை; இன்றோ எந்த ஒரு காலைப் போதினைக் கணக்குக்காக எடுத்துக் கொண்டாலும், வீட்டினில் உள்ளவர்களைக் காட்டிலும் வெளியே உள்ளவர்களின் தொகையே அதிகம். எந்த நகரத்து நெடுஞ்சாலையினையும் கூர்ந்து பார்த்திடு தம்பி! சாரை சாரையாக மக்கள், ஆடவர் பெண்டிர், இளைஞர், முதியோர், சென்ற வண்ணம் உள்ளனர்! எத்தனை வேகம் கவனித்தனையா! ஓர் வலிவுமிக்கவன் வீசிடும் சவுக்கடிக்குப் பயந்து, இதோ செல்கிறோம்! செல்கிறோம்! தாமதிக்கமாட்டோம்! என்று கூறிக் கொண்டே செல்பவர் போலத் தோற்றமளிக்கிறது, நடை, வேகம், பரபரப்பு. நண்பர்கள் தொலைவிலே இருந்துகொண்டே, புன்னகையை உதிர்த்துவிட்டுச் செல்கின்றனர். வேலை! வேலை! வேலை! ஓயாத வேலை! கடிகார முள் வேலாகிக் குத்துகிறது, விழி! எழு! நட! என்று; சங்கொ- காதைத் துளைக்கிறது, கிளம்பு! கிளம்பு! உருளைகள் அழைக்கின்றன உடனே வந்திடு என்று, இத்தனை பரபரப்புக்கு இடையில், சமுதாயப் பின்னலுக்கு இடையில், தனி மனித வாழ்க்கை எப்படித் தப்பிப் பிழைத்துத் தழைத்திட முடியும்?

தம்பி! இந்தப் பிரச்சினை பற்றி அறிவாளர்கள் மேலும் நல்ல முறையில் தமது கருத்தினைச் செலுத்திட வேண்டும்.

இந்நிலையில், தனி வாழ்க்கை என்பது, அவரவர் தமக்கென அமைத்துக் கொள்ளும் வாழ்க்கை என்ற இலக்கணத்தை இழந்து விடுகிறது. வாழ்க்கையே இன்று பெரிதும், சமூகத்தில் ஏற்படும் பிணைப்பினாலும், பரவி விடும் சூழ்நிலையினாலும், இவைகளை முறைப்படுத்தும் பொறுப் பேற்றுக் கொண்டுள்ள அரசினாலும், அமைத்து அளிக்கப்படுகிறது.

அரசு இன்று மேற்கொண்டுவிட்டுள்ள பொறுப்பின் அளவும் அதிகம்; வகையும் பலப்பல.

இது, பண்டை நாட்கட்கும் இன்றுள்ள நிலைக்கும் இடையில் முளைத்துப் படர்ந்துவிட்டுள்ள மிகப்பெரிய வேறுபாடு, இதன் காரணமாக “தனி மனித வாழ்க்கை’யில் அரசின் வலிவுமிக்க நீண்ட கரம் வெகுவாகப் புகுந்து விட்டது. அரங்கு அமைப்பதும், ஆடும் முறை வகுப்பதும் மட்டுமல்ல, அரசு மேற்கொண்டு விட்டுள்ள அலுவல் ஆட முற்படுவோருக்குக் கயிறு பூட்டி இயக்குவிக்கும் அலுவலையும் அரசு மேற்கொண்டு விட்டிருக்கிறது.

எனவேதான் தம்பி! இன்று வாழ்வு செம்மைப்பட வேண்டுமெனில், அது அவரவர்கள் தத்தமது அறிவாற்றலுக் கேற்றபடி செய்து கொண்டிட இயலும் என்பதிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டதுடன், வாழ்வின் வகையை ஆக்கித் தந்திடும் பொறுப்பினை அரசு மேற்கொண்டுவிட்ட நிலை உறுதிப்பட்டுப் போய்விட்டிருக்கிறது.

எனவே, சீர்கேடுகள், முறைகேடுகள் நீக்கப்படுவதற்கான பணியினைத் தனி மனிதர்கள் மேற்கொண்டு வெற்றி பெற்றிட வாய்ப்பு பெரிதும் கிடைப்பதில்லை — ஒரு சிலர் அத்தகைய தூய தொண்டாற்றி வருகின்றனர், நன்றி, மகிழ்ச்சி — அரசு மேற்கொண்டிட வேண்டிய அளவுக்குப் பிரச்சினை பெரிதாகிவிட்டிருக்கிறது; சிக்கல் மிகுந்ததாகி விட்டிருக்கிறது.

அத்தனை பொறுப்பினை மேற்கொண்டுவிட்டுள்ள அரசு இருக்கிறதே அதன் பொருள் என்ன? வகை என்ன? தனி மனிதர்கள் தமது வாழ்வை வகைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் இழந்திட வேண்டிய விதமாகப் படை எடுத்துள்ள அரசு எனும் அமைப்பின் இலக்கணம் என்ன? விந்தை, தம்பி! மிக விந்தையானது!! அதே தனி மனிதர்கள் ஆக்கித் தந்திடும் அமைப்பே அந்த அரசு!! அதற்கா அத்தனை ஆற்றல்? ஆம்! அதற்கே!! உலைக்கூடத்தான் அமைத்துத் தருவதே வாள்! ஆயின் அந்த வாள் அவன் சிரத்தினையே கொய்திடும் வலிவு பெற்றுக் கொள்கிறதல்லவா? மனிதன் வெட்டுவதே குளம்! ஆயின் இடறி வீழ்ந்திடின் அவன் உயிரையே குடித்துவிடுகிறதல்லவா! பருகிடும் தேன், துளி சில உடலிலே தங்கிடின், சிற்றெறும்பு மொய்த்துக் கடித்திடுகிறதல்லவா, உடலை.

ஆகவே, தம்பி! இற்றை நாட்களில், தனி மனிதர்கள் பெற்றுவிட்ட வேகம் நிறைந்த வாழ்க்கை காரணமாக, சமுதாயப் பின்னலை அரசிடம் ஒப்படைத்துவிட்டிருப்பதாலும், அந்த அரசு தனிமனித வாழ்க்கையின் வடிவத்தையும் வகையையும் உருவாக்கிடும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பதாலும், அத்தகைய அரசு எவ்விதமாக அமைகிறதோ அதைப் பொறுத்தே, தனிமனித வாழ்வின் செம்மையும், சமுதாய வாழ்வின் மாண்பும் இருக்கிறது.

தனிமனித வாழ்க்கை மங்கி மடிந்துகொண்டிருக்கும் இந்த நாளிலேயே இன்னமும் போதுமான தெளிவுடன் உணரப்படா மலிருக்கிற இந்தப் பேருண்மையைத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே உணர்ந்து நெல்லும் நீரும் அல்ல, மன்னனே நாட்டுக்கு உயிர் அளித்திடுவோன் என்று அரசுக்கு உள்ள வலிமையினை முதன்மையானதாக்கிக் காட்டினர்.

அன்று அது எந்த அளவுக்கு உண்மையாக இருந்ததோ, அதனினும் பன்மடங்கு அதிக அளவுள்ள உண்மை அது இன்று.

மன்னன். . . என்பது அரசு முறையிலே ஒருவகை; எனவே, இன்று மன்னன் என்ற சொல்லுக்கு ஈடாக அரசு என்ற சொல்லினைக் கொண்டிடல், முறையேயாகும்.

தம்பி! மன்னன் பிறக்கிறான்; “அரசு’ அமைக்கிறோம் இருவேறு நிலைகள்! இந்த இருவேறு நிலைகளுக்கிடையில், இரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றன என்பதனை விளக்கிக் காட்டுகிறது வரலாற்றுச் சுவடி.

“அரசு’ அமைத்திடும் பொறுப்பு. தனி மனிதரின் உரிமை. அதனை நிறைவேற்றுவதிலே தனி மனிதர் எத்தனைத் திறமை கொள்கின்றனரோ, அதனைப் பொறுத்தே அரசு அமைகிறது; அதன் தொடர்பாகத் தனி மனித வாழ்க்கையின் வாழ்வும் இருக்கிறது.

எனவே, இன்று அரசியல் என்பது, தீண்டத் தகாத ஒன்று என்று எண்ணுவோர், ஏற்பட்டுவிட்டுள்ள மாறுதலை அறிந்து கொள்ளாதவர்கள் என்றுதான் கூற வேண்டும். அரசு அமைத்திடும் உரிமையைச் செவ்வனே நிறைவேற்ற வழி வகுத்திடும் கலையே, அரசியல். பாமர மக்கள் பாராளும் காலமிது என்றும், சிட்டுக்குருவிகள் வல்லூறை விரட்டும் காலமிது என்றும், எடுத்துரைத்து விட்டு, அரசியல் அத்துணை இன்றியமையாத அலுவலல்ல என்றும் பேசுவது, நாம் எவரிடம் எதைப் பறித்துக் கொண்டோம், எவர் நம்மிடம் உள்ளதைப் பறித்துக் கொள்வர் என்று எண்ணிக் கொண்டு, பொருள் எடுத்துக் கொண்டு நெடுவழி போவதற்கு ஒப்பாகும்.

தம்பி! இதனை உணர்ந்தே நாம் அரசியல் பணியினை மேற்கொண்டுள்ளோம்; இந்தப் பணியின் வகை, திறம், இதிலே கிடைத்திடும் வெற்றி என்பதனைப் பொறுத்தே, சமூக இயல், பொருளாதார இயல், கலை இயல், பண்பாட்டு இயல், நெறி இயல் என்பவை அனைத்தும் சீர் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

எனவே, நாம் ஓர் விடுதலைப் போரினில் ஈடுபட்டிருக்கி றோம் என்பதனை மறந்திடலாகாது,

விடுதலை என்றால், ஒரு நாட்டைப் பிறிதோர் நாட்டார் பற்றிக் கொண்டுள்ளதனை நீக்கிடுவது மட்டுமே என்போர் குறையறிவினர்.

நமது நாட்டிலேயே, நமது நாட்டவராலேயே மூட்டி விடப்படுபவை, பூட்டிவிடப்படுபவை ஆகிய தளைகளிலிருந்து மக்களை விடுவிக்கும் போரும் விடுதலைப்போரே.

அந்தப் போரினில் ஈடுபட்டுள்ளோருக்கு, மற்றைய விழாக்களைக் காட்டிலும் இவ்விழா, கருத்துக்கு விருந்தளிக்கும் தன்மையது என்பது பற்றியே, கழகத்தவர் பொங்கற் புதுநாளைப் போற்றுகின்றனர், அதன் பொலிவு பற்றி மகிழ்ந்துரைத்து விழா நடத்துகின்றனர்.

பொங்கற் புதுநாளின் பொலிவு, தம்பி! உன் இல்லத்திலும் இதயத்திலும் ஒளி தந்திடுவதாக! என்ற என் நல்வாழ்த்தை அளிக்கின்றேன். இவ்வளவுதானா என்கின்றாயா?

தம்பி! வில்லியம் கல்லன் பிரயான்ட் எனும் அமெரிக்கக் கவிஞரொருவர் (1794–1878) “விடுதலை’ பற்றித் தீட்டிய கவிதையினைப் படித்திடும் பேறு, மொழிக் கிளர்ச்சியின்போது சிறைப்பட்டிருந்தபோது கிடைத்தது.

இத்தனை கூறுகிறானே, அண்ணன் பொங்கற் புதுநாள் பற்றி, என்ன தருகின்றான் என்று எண்ணிக் கொள்வாய், தம்பி! உனக்கு நான் என்ன தந்திட இயலும், பொன்னும் பொருளுமா! சே! உன் வியர்வைத் துளியிலே அஃது விளைந்திடும்! எனவே, எனக்குக் கிடைத்ததை உனக்களிப்பது என்ற முறையிலே அந்தக் கவிதையைத் தந்திடுகின்றேன்;

விடுதலையே! இருண்ட மொய்குழல்
சுருண்டு அழகு தரும்
கொடிபோன்றாள் !
இளமங்கை !
என்று உன்னைக் கூறுகின்றார்.
உண்மை அல்ல அது,
கவிஞர் கனவில் உருவானது.
வாளொடு கரம் !
வந்திடு கேடு தடுத்திடும்,
கேடயம் மறுகரம், படைக்கலன் பலஉள
போரிடும் வீரன் நீ !
களம் பல கண்ட கட்டுடலோன் நீ !
நெறிந்த புருவம் நேர்த்தி அளித்திடும்
முகமெலாம் வடுக்கள் போர்ப்புகழ்க் குறிகள் !
இடிதனை ஏவினர் உனை அழித்திட
இலைஅதற்கு ஆற்றல் உனை வீழ்த்திட !
உலைபல தனிலே உருக்கி வடித்தனர்
உனைப் பிணைத்திடத் தளை பலப்பல
கட்டி அடக்கினோம் என்றவர் களித்தனர்.
பட்டுத் தெறித்திடப் பலமதை ஏவினாய் !
உனை அடைத்திட அமைத்தனர் ஆழ்சிறை !
உதைத்து எழுந்தனை சிறை பொடியாகிட !
கொழுந்துவிட்டெறி தீயென, நீயுமே
எழுந்தனை! எழுப்பினை, எங்குள பேரையும் !
உன்குரல் கேட்டதும் பற்பல நாட்டவர்,
இங்குளோம்! இங்குளோம் !
என்று உடன் முழக்கினர்.
அடக்கிடும் சழக்கர்கள் அரண்டு ஓடிட !

கன்னல் மொழிச் சுவையில், விழி விருந்தில், விழா மகிழ்வில் உள்ள உனக்கு இந்தக் கவிதையைத்தானா நான் அனுப்பித் தருவது என்று எண்ணிக் கொள்ளமாட்டாய்; அறிவாயே தம்பி! நீ, துறை இரண்டு, அகம்; புறம்.

அண்ணன்,

14–1–66

மூலக்கட்டுரை
http://www.annavinpadaippugal.info/kadithangal/agamum_puramum_1.htm

--

--

SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite